பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

686

இந்தியா

செலாவணி நாணயமாக மாத்திரம் இருந்தது. மேலும் அரசாங்கத்தார் ஒரு ரூபாய்க்கு 1 ஷி .4 பெ. வீதம் சவரன்களையும் அரைச் சவரன்களையும் பெற்றுக் கொள்வதாக அறிக்கை யிட்டனர்.

1898-ல் இந்தியாவில் தங்கநாணயத் திட்டம் ஏற்படுத்துவதைப்பற்றி ஆராயச் சர் ஹென்ரி பவுலர் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்தியாவில் தங்க நாணயச் செலாவணியுடன் தங்கத் திட்ட நாணய முறை ஏற்படுத்த வேண்டு மென்று கூறியது. கமிட்டியின் சிபார்சுகளை அரசாங்கம் ஏற்றது. 1899-ல் சவரன்களும் அரைச் சவரன்களும் சட்டச் செலாவணி நாணயங்களாகச் செய்யப்பட்டன. வெள்ளி ரூபாயும் சட்டச் செலாவணி நாணயமாக இருந்தது. ஆனால் வெள்ளியைக் கொடுத்து ரூபாயாக மாற்றும் உரிமை மட்டிலும் இல்லை. சவரன்களுக்கும் ரூபாய்க்கும் பரஸ்பர மதிப்பு விகிதம் ரூ., 1ஷி. 4பெ. (அதாவது 1 சவரன் = ரூ.15) ஆனால் இந்தியாவில் தங்கத் திட்ட நாணய முறை அமைக்க வேண்டுமென்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாகத் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் (Gold Exchange. Standard) தோன்றியது. 1894-1900 ஆண்டுகளில் தங்க நாணயங்களை வழங்கிப் பழக்கத்தில் கொண்டுவர அரசாங்கத்தார் முயன்றனர். ஆனால் நாட்டில் பஞ்சமேற்பட்டிருந்ததால் அதிக மதிப்புள்ள நாணயத்துக்குத் தேவையில்லாமல் ரூபாய்களுக்கு அதிக கிராக்கி யேற்பட்டது. தங்க நாணயங்கள் திரும்பவும் கஜானாவில் வந்து சேர்ந்தன. அரசாங்கத்தார் நாட்டில் தங்க நாணயங்களில் ஆசையில்லை என்று எண்ணித் திரும்பவும் வெள்ளி வாங்கி ரூபாய்கள் அச்சிட்டு வெளியிட்டனர். ஆகையால் நடை முறையில் உள்நாட்டில் குறி அல்லது ஒப்பு நாணய (Token Money) அந்தஸ்து வாய்ந்த ரூபாய்களும் காகித நோட்டுக்களும் (Paper Notes) செலாவணியாயிருந்தன. மேலும் 1904 வரை இந்திய மந்திரி இந்திய சர்க்கார் சம்பந்தமான செலவுக்கு வேண்டிய மட்டில் அவ்வப்பொழுது கவுன்சில் பில் (Council Bills) முறையில் ஸ்டர்லிங்கு வருவித்துக் கொள்வது வழக்கம். அதாவது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப விரும்புவோர்க்கு அவர்களிடமிருந்து பவுண்டு ஸ்டர்லிங்கு பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 1ஷி. 4 பெ.க்கு ஒரு ருபாய் வீதம் இந்தியாவின் பெயரில் (கவர்னர் ஜெனரல் மீது) உண்டியல் விற்பது வழக்கம். கவுன்சில் பில் அல்லது கவுன்சில் உண்டியல் என்ற இந்த உண்டியல்களுக்கு இந்தியாவில் ரூபாய் கொடுப்பது வழக்கம். ஆனால் 1904 முதல் இந்தியாவில் ரூபாய்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு, ரூபாயின் மாற்று விகிதம் 1 வி. 4 பெ.க்கு மேல் ஏறும்பொழுதெல்லாம் இந்தியா மந்திரி ரூ. 1க்கு 1 ஷி. 4 பெ. வீதம் தம் தேவைக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்குப் பணம் அனுப்பவேண்டியவர்களுக்கெல்லாம் கவுன்சில் உண்டியல்களை விற்பது வழக்கமாயிற்று. 1907-8-ல் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததின் பயனாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அதிகப் பணம் அனுப்ப வேண்டி வந்தது. பவுண்டு ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி ஏற்பட்டது. ரூபாயின் நாணய மாற்று மதிப்புக் குறைந்தது. இச்சமயம் இந்தியா மந்திரியின் உத்தரவின்பேரில் கவர்னர் ஜெனரல் இங்கிலாந்துக்குப் பணம் அனுப்ப வேண்டியவர்களிடமிருந்து ரூபாய் பெற்று, அதற்குப் பதிலாக 1 ஷி. 4 பெ. வீதம் இந்தியா மந்திரியின் பெயரால் உண்டியல் விற்றார். இவ் வுண்டியல்களுக்கு இந்தியா மந்திரி இங்கிலாந்தில் பவுண்டு ஸ்டர்லிங்கு கொடுத்துவந்தார். இவ்வுண்டியல்களுக்கு ரிவர்ஸ் கவுன்சில் பில், அல்லது ரிவர்ஸ் கவுன்சில் உண்டியல் என்று பெயர். இம்மாதிரி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உண்டியல்கள் மூலம் குறிப்பிட்ட நாணய மாற்று விகிதப்படி பணம் அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றத் தனியாகத் தங்கத் திட்டச் சேமநிதி ஒன்று (Gold Standard Reserve) ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் உள்நாட்டில் தங்க நாணயச் செலாவணி இல்லாமல், ஒப்பு அல்லது குறி நாணயங்களான ரூபாய்களும், நோட்டுக்களும், வேறு சில்லரை நாணயங்களும் பழக்கத்தில் வந்தன. இங்கிலாந்துக்குப் பணம் செலுத்தவேண்டி வந்தபோது, அரசாங்கத்தாரால் 1 ஷி .4 பெ. மாற்று விகிதப்படி உள்நாட்டு நாணயத்துக்குப் பதிலாக அயல் நாட்டில் தங்க நாணயம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்குத்தான் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் என்று பெயர். 1913-ல் நாணய முறை விஷயமாக ஆலோசனை கூற ஜோசப் ஆஸ்ட்டென் சேம்பர்லின் தலைமையில் நியமிக்கப்பட்ட ராயல் கமிஷனும் இந்தியாவுக்குத் தங்க நாணயச் செலாவணி முறை தேவையில்லையென்றும், தங்க நாணய இன மாற்றுத்திட்டமே மிகவும் உகந்ததென்றும் 1914-ல் தனது அறிக்கையில் கூறிற்று.

ஆனால், 1915க்குப்பின் இந்தியாவின் வர்த்தகச் சாதக நிலை அதிகரித்து, ரூபாய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. மேலும் 1916லிருந்து வெள்ளி விலையும் வெகுவாக அதிகரித்தது. 1915-ல் ஓர் அவுன்ஸ் வெள்ளி விலை 27 பெ. 1919-ல் 78 பெ. இந்தியாவில் வெள்ளி ரூபாய்கள் உருக்கிப் பதுக்கப்பட்டன. நாணயப் பஞ்சமும் ஏற்பட்டது. ஒரு ரூபாய் இரண்டரை ரூபாய் நோட்டுக்களும், நிக்கல் இரண்டணாக்களும் வெளியிடப்பட்டன. வெள்ளி விலை ஏற்றத்தாலும், ரூபாய்க்குக் கிராக்கி ஏற்பட்டதாலும் ரூபாயின் ஸ்டர்லிங்கு மதிப்பு உயர்ந்து கொண்டேபோய் 1919-ல் 2ஷி. 4 பெ. ஆக இருந்தது. அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தை 1ஷி. 4பெ. ஆக நிலைநிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ரூபாயின் மதிப்பு, வெள்ளியின் விலையைப் பின்பற்றியது. தங்க நாணய இனமாற்றுத் திட்டம் குலைந்தது. 1919-ல் இந்திய நாணய முறைகளை ஆராய்ந்து சீராக்க வழி கூற, சர் ஹென்ரி பாபிங்க்டன் ஸ்மித் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் அறிக்கையில் ரூபாயின் மாற்று விகிதத்தை நிலைநிறுத்த வேண்டு மென்றும், 1 ரூபாய்க்கு 2 ஷி. விகிதமே (1 சவரன் = ரூ. 10) சரியானது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதன் படி1920-ல் 1 சவரன் 10 ரூபாய் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விரைவில் முன்னிருந்த நிலைமை மாறியது. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதி அதிகரித்து, வர்த்தகப் பாதக நிலையேற்பட்டு, ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி உண்டாகி, ஸ்டர்லிங்கு மதிப்பு ஏறி, ரூபாய் மதிப்பு 1 ஷி.3 பெ. வரை இறங்கியது. அரசாங்கத்தார் 2ஷி. விகிதத்தில் இங்கிலாந்தின்மேல் உண்டியல் விற்று, இந்த 2 ஷி. விகிதத்தை நாட்ட முயன்றனர். ஆனால் அரசாங்கத்தாருக்கும் வியாபாரிகளுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டது. கடைசியில் 1920 செப்டம்பரிலிருந்து அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டனர்.

1925 ஆகஸ்டில் எட்வர்டு ஹில்ட்டன் யங் தலைமையில் இந்திய நாணய நிலையைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனை கூற ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்-