பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

695

இந்தியா

தோட்டக்கால் கைத் தொழில்கள் : முதலிலிருந்தே ஐரோப்பியர்களே இத் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தேயிலை, காப்பி, அவுரி, ரப்பர், சணல் முதலிய வைகள் முக்கியமான தோட்டக்கால் பயிர்கள்.

தேயிலை : 1834-ல் பென்டிங்க் பிரபு காலத்தில் தேயிலைப் பயிர் செய்வதில் ஊக்கம் கொண்டு சீனாவிலிருந்து விதைகளும், பயிரிட ஆட்களும் வருவித்து, 1835-ல் அஸ்ஸாமில் ஒரு தேயிலைத் தோட்டம் போடப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அஸ்ஸாம், வங்காளம், வயனாடு, நீலகிரி, திருவிதாங்கூர், பஞ்சாப் முதலிய இடங்களிலும் பல தேயிலைத் தோட்டங்கள் போடப்பட்டன. 1871லிருந்து இத் தொழில் செழித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டது. பயிர் செய்வதில் நல்ல முறைகள் கையாளப்பட்டதாலும், தேயிலையைப் பாடம் செய்வதில் எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் தேயிலை மகசூல் பெருகி, உலகச் சந்தையிலே இந்தியத் தேயிலை ஒரு முக்கிய இடம் பெற்று விட்டது. 1930-ல் உலக வியாபார மந்தத்தாலும் ஜாவாவிலும், சுமாத்திராவிலும் தேயிலை பெருவாரியாகப் பயிரானதாலும் இந்தியாவில் இத் தொழிலுக்குக் குறைவு ஏற்பட்டது. எனவே இந் நிலையைச் சமாளிக்க 1933லிருந்து 1947 வரை தேயிலை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து, அவைகளைப் போலவே தேயிலை ஏற்றுமதி விகிதத்தைக் குறைத்துக்கொண்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் காரணமாகத் தேயிலை விலையும் ஏற்றுமதியும் ஏராளமாக உயர்ந்தன.

காப்பி : இந்தியாவில் 1830லிருந்து காப்பிச் செடிகள் பயிராக்கப்பட்டு வந்துள்ளனவாயினும் 1840-ல் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் இத் தொழிலைக் கைப்பற்றிய பின்னரே காப்பித் தோட்டத் தொழில் வளர்ச்சி யடைந்தது. 1860 முதல் 1879 வரை இத் தொழில் நல்ல ஏற்றம் அடைந்தது. ஆனால் 1879-ல் ஒருவித நோயினாலும், வண்டுகளாலும் பயிருக்கு அழிவும், பிரேசில் காப்பிக்கொட்டையினால் போட்டியும் ஏற்பட்டு, இத் தொழிலில் ஊக்கம் குறைந்து, காப்பித் தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்களாகவும் சின்கோனாத் தோட்டங்களாகவும் மாற் றப்பட்டன. 1889 முதல் 1896 வரை சற்றுத் தலை நிமிர்ந்த இத் தொழிலுக்கு மறுபடியும் மந்தம் ஏற்பட்டது இதற்குக் காரணம் உலகத்தில் தேவைக்கு மேல் அதிகக் காப்பிக்கொட்டை உற்பத்தியானதே. இரண்டாவது யுத்தத்தின்போது இந்தியக் காப்பிக் கொட்டையை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாமல் இத் தொழிலுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந் நிலையைப் போக்க இந்தியக் காப்பி போர்டு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள் நாட்டில் பிரசாரம் மூலம் காப்பி குடிக்கும் பழக்கத்தைப் பெருகச் செய்து தொழிலுக்கு உயிர் அளித்தனர். காப்பிச் செடியும் நிரம்பப் பயிர் செய்யப்பட்டு மகசூலும் பெருகிற்று. 1943-ல் காப்பிக்கொட்டையின் ஏற்றுமதி, உள் நாட்டு வினியோகம், விலை நிருணயம் முதலிய எல்லா அதிகாரத்தையும் இந்தப் போர்டுக்குக் கொடுத்தனர். 1948 லிருந்து காப்பிக்கொட்டையின் விலை ஏறியிருக்கிறது. இதற்குக் காரணம் உலகத்தில் காப்பி உற்பத்திக் குறைவும், உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் காப்பிக் கொட்டைக்குக் கிராக்கி மிகுந்திருப்பதுமே யாகும்.

அவுரி : அவுரிச் சாகுபடியும், அவுரிச் சாயம் இறக்குதலும் இந்தியாவில் வெகுகாலமாக நடந்து வந்த தொழிலாகும். முற்காலத்தில் குஜராத்திலும், இந்தியாவின் மேற்குப்பாகத்திலும் அவுரி பயிராக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அவுரிச் சாய வியாபாரம் செய்தனர். பின்னர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தொழில் குன்றியது. கம்பெனியார் திரும்ப 19ஆம் நூற்றாண்டில் இத்தொழிலை வங்காளத்தில் துவக்கினர். 1895 வரை இத்தொழிலுக்கு ஏற்றம் உண்டாயிற்று. ஆனால் 1897லிருந்து ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ரசாயன முறையில் சாயம் தயாரிக்கப்படவே, இச்சாய ஏற்றுமதி குறைந்து அவுரிச் சாகுபடியும் குன்றியது. முதல் உலக யுத்தத்தின்போது சற்றுத் தலைநிமிர்ந்த இத்தொழில் மறுபடியும் குன்றிவிட்டது. இரண்டாவது உலக யுத்தத்தினால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை.

ரப்பர் : 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ரப்பர் தோட்டத் தொழில் இந்தியாவில் தொடங்கிற்று. திருவிதாங்கூர், கொச்சி, சென்னை, அஸ்ஸாம், குடகு, மைசூர், அந்தமான் ஆகிய இடங்களில் ரப்பர் மரங்கள் பயிராகின்றன. முதல் உலக யுத்தம் இரண்டாம் உலக யுத்த காலங்களில் இந்தியாவில் விளையும் ரப்பருக்குக் கிராக்கி மிகுந்தது. யுத்தத்திற்குப் பிறகு விலை இறங்கிவிட்டது. வெளிநாட்டுப் போட்டியைத் தடைசெய்ய, அரசாங்கம் ரப்பர் விலையைக் கட்டுப்படுத்தியும், இறக்குமதியைத் தடுத்தும், இறக்குமதியாகும் ரப்பர் சாமான்கள்மீது வரி போட்டும் இந்திய ரப்பர் தோட்டத் தொழிலைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.

தொழிற்சாலைத் தொழில்கள் : பிரிட்டிஷ் வர்த்தக முதலாளிகளின் தூண்டுதலின் மேல், கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியக் கைத்தொழிலுக்கு ஆதரவு அளித்து வந்ததை நிறுத்த வேண்டுமென்றே கைத் தொழில்களைத் தலைகாட்டாமல் அடித்தனர். 1858 லிருந்து இந்தியா ஆங்லேய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பின்னரும் அரசாங்கத்தார் கைத்தொழில் வளர்ச்சியில் போதுமான ஊக்கம் காட்டவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்சன் பிரபு காலத்தில்தான் அரசாங்கத்தாரின் போக்குச் சற்று மாறி கைத்தொழில் வளர்ச்சிக்காக இம்பீரியில் வர்த்தக இலாகாவும், 1906-ல் மாகாணங்களில் கைத்தொழில் இலாகாக்களும் நிறுவப்பட்டன. ஆனால் மறுபடியும் பிரிட்டிஷ் முதலாளிகளுடைய எதிர்ப்பினாலும், 1910-ல் இந்தியா மந்திரி மார்லி பிரபு இம் முற்போக்குக் கொள்கையை ஆதரிக்காததாலும் இந்திய அரசாங்கத்தாருக்கு ஊக்கம் குன்றி இலாகாக்கள் கலைக்கப்பட்டன. ஆனால் இதுசமயம் நாட்டில் சுதேசி இயக்கம் வலிவு பெற்றது. மறுபடியும் 1914-ல் தான் கைத்தொழில் இலாகா நிறுவப்பட்டது. இவ்வாறு சர்க்கார் அசட்டையாக இருந்தும்கூட 19ஆம் நூற்றாண்டில் சில முக்கியமான கைத்தொழில்கள் தோன்றின.

நிலக்கரி எடுத்தல் : 1830-ல் ராணிகஞ்சு என்ற இடத்தில் முதன் முதல் நிலக்கரி வெட்டி யெடுக்கப்பட்டது. 1854க்குள் இன்னும் மூன்று சுரங்கங்கள் வெட்டப்பட்டன. கிழக்கிந்திய ரெயில்வே அமைக்கப்பட்ட பின்நிலக்கரிக்குத் தேவை அதிகம் ஏற்பட்டு, 1880க்குள் 56 சுரங்கங்களில் வேலை நடந்து வந்தது. ஆனால் சூயெஸ் கால்வாய் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டபின் அயல்நாட்டு நிலக்கரி இறக்குமதியால் போட்டி ஏற்பட்டது. நாளடைவில் இக்கரியும் இந்தியாவுக்குத் தேவையாக இருந்தது. பின்னர் இருப்புப் பாதைகளும் தொழிற்சாலைகளும் அதிகரிக்கவே, இத்தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது.

முதல் உலக யுத்தமும் கைத்தொழில்களும்: 1914 முதல் 1919 வரை நடந்த முதல் உலக யுத்தத்தின் பய-