பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

718

இந்தியா

யங்களையும் ஆலோசித்து இத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய இருப்புப் பாதைகள் : . சாலைகளில் ராஜபாட்டை இருப்பது போலவே, இருப்புப் பாதைகளிலும் ராஜபாட்டைகள் உண்டு. முக்கிய நகரங்களாகிய கல்கத்தா, பம்பாய், சென்னை, டெல்லி இவைகளிலிருந்து ராஜபாட்டைகள் நூற்றுக்கணக்கான மைல் தூரம் சென்று மற்ற நகரங்களை இணைக்கின்றன. இவைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவது சென்னை டெல்லி இருப்புப் பாதையயாகும். சென்னையிலிருந்து தினந்தோறும் புறப்படும் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் வண்டி, விஜயவாடா, நாகபுரி,

சுருங்கை வழி ரெயில் பாதை
உதவி : தட்சிண ரெயில்வே

ஜான்சி, போபால், குவாலியர், ஆக்ரா, வடமதுரை வழியாக 49 மணி நேரத்தில் 1,361 மைல் தூரம் சென்று டெல்லியை அடைகிறது. இதுதான் இந்தியாவிலேயே மிக நீளமான ராஜபாட்டை. இங்கிலாந்து முதலிய அநேக சிறிய தேசங்களில் இவ்வளவு நீளமான இருப்புப் பாதையைக் காண முடியாது.

சென்னையிலிருந்து கல்கத்தா போகும் மார்க்கம் விஜயவாடா வரையில் கிராண்ட்-டிரங்க் மார்க்கமாகவே சென்று, பின்னர், ராஜமகேந்திரவரம், விசாகப்பட்டினம், வால்ட்டேர், கட்டாக் வழியாகச் சென்று கல்கத்தாவை அடைகிறது. இது 1.032 மைல் நீளமுள்ளது. சென்னை - பம்பாய் இருப்புப்பாதை அரக்கோணம், குந்தக்கல், ராய்ச்சூர், ஷோலாப்பூர், பூனா வழியே சென்று மேற்குத் தொடர்ச்சி மலைக் குடைவு களின் வழியே சென்று பம்பாயை அடைகிறது. இதன் நீளம் 794 மைல்.

கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் இருப்புப் பாதை இந்தியாவிலேயே அதிக மக்கள் நெருக்கம் உள்ள கங்கைச் சமவெளி வழியே போகிறது. இதனால் இப்பாதை வழியாக அநேக முக்கியமான வண்டிகள் போகின்றன. அவற்றுள் எல்லாம் புகழ்பெற்றது புயல் வண்டி என்ற தூபான் எக்ஸ்பிரஸ். இது கயா, அல்காபாத், மொகல்சராய் என்ற நகரங்களின் வழியாகச் செல்லுகிறது. மொகல்சராயிலிருந்து பிரியும் பாதையில்தான் காசி இருக்கிறது.

மின்சார வண்டிகள் பம்பாயிலிருந்து பூனாவுக்கும், சென்னையிலிருந்து தாம்பரத்துக்கும், பொரிவ்லியிலிருந்து வீராருக்கும் செல்லுகின்றன. அவற்றுள் பம்பாயிலிருந்து பூனாவுக்குப் போகும் ‘தட்சிணராணி’ மிக்க பெயர் பெற்றது. அழகிய இயற்கைக் காட்சிகள் மிகுந்த மேற்குத் தொடர்ச்சிமலைப் பிரதேசத்தில் இது ஓடுகிறது. இதுவே இந்தியாவில் அதிக தூரம் ஓடும் மின்சார ரெயில்வண்டியாகும்.

பலவகைப் பாதைகள் : இரண்டு தண்டவாளங்கட்கு மிடையிலுள்ள தூரத்தை வைத்து அகலப் பாதை, மீட்டர்ப் பாதை, குறுகிய பாதை என மூன்று வகைப் பாதைகள் இருக்கின்றன. அகலப் பாதையின் அகலம் 5 அடி 6 அங். மீட்டர்ப் பாதையின் அகலம் 3 அடி முதல் 3 அடி 4½ அங்குலம் வரை. குறுகிய பாதையின் அகலம் 2 அடி முதல் 2 அடி 6 அங். வரை. இந்தியாவில் முதலில் போட்ட மூன்று நகர இணைப்புப் பாதைகள் அகலப்பாதைகளாகும். அவற்றிற்கு மிகுந்த செலவு ஆவதாலும், வண்டிகள் விரைவாகப் போக வேண்டியிருப்பதாலும், பின்னர் அமைத்த பாதைகள் மீட்டர்ப் பாதைகளாகும். குன்றுகள் போன்ற மேட்டுப் பிரதேசங்களில் செல்லும் பாதைகளும், இடையேயுள்ள சிற்றூர்களுக்குப் போய்வரும் கிளைப்பாதைகளும் குறுகிய பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 1946-ல் இந்தியாவில் 2,068 மைல் அகலப் பாதையும், 16.004 மைல் மீட்டர்ப் பாதையும், 3,827 மைல் குறுகிய பாதையும் இருந்தன.

ஐந்து வகுப்புக்கள் : பிரயாணி வண்டிகளில் ஐந்து வகுப்புக்கள் இருக்கின்றன. அவை காற்றுப் பதப்படுத்திய வகுப்பு (Air-conditioned class), முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, இடை வகுப்பு (Interclass), மூன்றாம் வகுப்பு என்பன. நெடுந்தூரம் செல்லும் மெயில், எக்ஸ்பிரஸ் வண்டித் தொடர்களில் இந்த ஐந்து வகுப்புக்களும் இருக்கும். குறைந்த தூரம் செல்லும் வண்டித் தொடர்களிலும், கிளைப்பாதை வண்டித் தொடர்களிலும் இரண்டு அல்லது மூன்று கீழ் வகுப்புக்கள் மாத்திரமே இருக்கும்.

பலவகை வாகன்கள்: பலதரப்பட்ட சாமான்களை ஏற்றிச் செல்ல வெவ்வேறு வகையான வாகன்கள் உபயோகத்தில் இருந்து வருகின்றன. எளிதில் கெட்டு விடக் கூடிய பழம், காய்கறி, கோழி இவற்றை ஏற்றிச் செல்லும் மூடிபோட்ட வாகன்களும், மூங்கில், விறகு, நிலக்கரி இவைகளைச் சுமந்து செல்லும் திறந்த வாகன்களும் உள்ளன. சமீபகாலத்தில் பழம் முதலியவைகளைக் கெட்டுப் போகாமல் கொண்டுபோகக் குளிர்ப் பெட்டி வான்கள் (Refrigerator van) பயன்படுகின்றன. சிக்கலான பாகங்கள் உள்ள பெரிய எந்திரங்களைப் பழுதில்லாமல் கொண்டுபோகக் கூடிய தனிப்பட்ட வாகன்கள் இருக்கின்றன. இவற்றுக்கு முதலை வாகன்கள் என்று பெயர். ஆடுமாடுகளை ஏற்றிச் செல்லப் பலகணி உள்ள தனிப்பட்ட வாகன்களை உபயோகிக்கின்றனர். பெட்ரோல், மண்ணெண்ணெய் இவற்றைக் கொண்டுசெல்ல உருண்டை வடிவமுள்ள வாகன்களை (Tank wagons) உபயோகிக்கிறார்கள்.

ரெயில் வண்டிகளில் தபால்களைக் கொண்டுபோகப் பல சிறப்பான வசதிகள் அடங்கிய தபால் வண்டிகளை உபயோகிக்கிறார்கள். இவ்வண்டிகளில் தபால் இலாகா உத்தியோகஸ்தர்கள் வெவ்வேறு ஊர்களுக்குப் போக வேண்டிய தபால்களைப் பிரித்துக் கட்டுவார்கள். இந்தக் கட்டுக்களைத் தனித்தனியாக வைத்திருக்க இந்த வண்டிகளில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ரெயில்வே தொழிலாளர்கள் சுமார் 10 இலட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமான தொழிலாளர்கள் ரெயில்வேக்களில்தான் வேலை