பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/790

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்து மகாசபை

725

இந்து மதம்

இது தூய நிலையில் நிறமற்றதாகவும் தெளிவாகவும் இருக்கும். மக்னீசிய, இரும்பு உப்புக்கள் இதில் அசுத்தங்களாகச் சேர்ந்திருந்தால் இது செந்நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கும். இதனால் இது ஈரத்தை ஏற்கும் தன்மையைப் பெறுகிறது. சித்த மருத்துவ முறையில் இது பலவகையினும் பல நோய்களுக்கும் பயன்படுகிறது.


இந்து மகாசபை : இந்தியாவில் 1926-ல் இந்து - முஸ்லிம் சச்சரவு மும்முரமாகத் தலை தூக்கியது. நாட்டில் பல கலவரங்கள் தோன்றின. இவ்வமயத்தில் முஸ்லிம் லீக் வலுப்பெற்றது. சில காலமாகவே இந்துத் தலைவர்கள் தம் மதப் பாதுகாப்புக்காக ஒரு ஸ்தாபனம் அமைக்கவேண்டுமென்று விரும்பினர். மேற்கூறிய சூழ்நிலையில் 1928-ல் மதன்மோகன் மாளவியா போன்ற பேரறிஞர்களின் ஆதரவில் இவ் விருப்பம் கை கூடியது. இந்துக்களின் தருமத்தையும் பண்பாட்டையும் போற்றுவதற்கே இந்த ஸ்தாபனம் ஆதியில் உருவாக்கப்பட்டது.

ஆனால் 1930-ல் இந்து மகாசபையினர் அரசியல் துறையில் ஈடுபட்டு முஸ்லிம்களை எதிர்க்கத் தொடங்கினர். காங்கிரசு மத விஷயத்தில் கடைப்பிடித்த நடு நிலைமையைத் தீவிரமாகக் கண்டித்தனர். 1937 முதல் காங்கிரசு அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்ததும், மகாசபையில் அங்கத்தினர்கள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கன. ஆயினும் 1937-ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகாசபையினர் படுதோல்வி அடைந்தனர்.

1938-ல் மகாசபை புத்துயிர் பெற்றதெனலாம். அவ்வாண்டு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் விநாயக தாமோதர சாவர்க்கர் என்பவர். தீவிரக் கொள்கையுடைய இவர் இந்திய விடுதலைக்காக அரும்பாடு பட்டவர். இவரது நோக்கம் இந்துக்களின் வன்மையைப் பெருக்கி இந்து ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதே. இந்துக்களின் ஆதிக்கத்தை வலுப்படுத்த மக்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கவேண்டுமென்று இவர் வற்புறுத்தினார்.

1938 முதல் காங்கிரசைப்போல மகாசபையும் ஆண்டுதோறும் தலைவர் தேர்தல், பொதுக்கூட்டம் நடத்துதல், செயற்குழு மாகாணக் குழுக்கள் அமைத்தல் முதலியவற்றைக் கையாண்டு வருகின்றது. 1939-ல் காங்கிரசு மாகாண அரசாங்கங்களிலிருந்து விலகியது தவறென சாவர்க்கர் கருதினார். பிறகு, காந்தியடிகள் லீக் தலைவர்களோடு ஒப்பந்தத்திற்காகப் பாடுபட்டதையும் கண்டித்தார். ஐந்தாண்டுகளாக மகாசபையின் தலைவராயிருந்த சாவர்க்கர் 1943-ல் பதவியிலிருந்து விலகவே, சியாம பிரசாத் முக்கர்ஜி தலைவரானார். இவரும் தீவிரவாதி; பாகிஸ்தான் கொள்கையை எதிர்த்தார்.

பாகிஸ்தான் இயக்கம் வலுவடையவே மகாசபையும் எதிர்ப்பை வலுப்படுத்தியது. காங்கிரசு முஸ்லிம்களுக்கு அளவற்ற சலுகை காட்டுகின்றதென்று மகா சபை 1947க்குப் பின்னரும் புகார் செய்தது. இந்திய அரசியல் அமைப்பில் மத விஷயத்தில் நடு நிலைமையை வற்புறுத்தி யிருப்பது பொருத்தமில்லாதது என்பது இக் கட்சியின் கருத்து. கே. க.


இந்துமத பாடசாலை, வாலாஜாபாத்: இது 1916 செப்டம்பர் 16ஆம் நாள் செங்கற்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையிலுள்ள வாலாஜாபாத்தில் பல மரங்களோடு கூடிய இயற்கை அமைப்புடைய நாற்பது ஏக்கர் நிலத்தில் ஓர் ஆசிரியருடனும் நான்கு மாணவருடனும் திரு.வா. தி. மாசிலாமணி முதலியாரால் தொடங்கப்பெற்றது. 1953-ல் 830 ஆண் பெண் குழந்தைகள் கல்வி பயிலும் நிலையை யெய்தியுள்ளது. இங்கு ஏழை மாணவர்களுக்கென ஒரு மாணவர் இல்லம் நடத்தப்பெறுகிறது. அதில் 650 மாணவர்கள் உள்ளனர். இங்குத் தமிழைத் தாய்மொழியாக உடைய குழந்தைகள் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், பம்பாய், தென் ஆப்பிரிக்கா, மலேயா முதலிய நாடுகளிலிருந்தும் வந்து, கல்வி கற்று வருகின்றனர்.

கல்வி கற்கும் திறனுடைய ஏழைச் சிறுவர்களுக்கு, இலவசமாகக் கல்வியும் உணவும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொணர்தலும், எல்லா மாணவர்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் எவ்வித வேறுபாட்டுணர்ச்சியுமின்றி ஒன்றி வாழ்வதற்குப் பழக்குதலும், ஒரு தொழிற்சாலை அமைத்துத் தொழிற் பயிற்சி கொடுத்தலும், மாணவர்களை உயர்ந்த நற்குடிமக்களாக வாழச் செய்தலும், நாட்டை ஆளவேண்டிய முறைகளை நன்கு தெரிந்துகொள்ளச் செய்தலும் பள்ளியின் நோக்கங்களுள் முதன்மையானவை. பள்ளிக்கூடத்திலும் மாணவர் இல்லத்திலுமுள்ள எல்லா வேலைகளையும் மாணவர்களே செய்துகொள்ளுகிறார்கள். மாணவர் இல்லத்துக் குழந்தைகள் தங்களுக்குள் ஓர் ஆட்சி மன்றம் அமைத்துக்கொண்டுள்ளனர். முதலிலிருந்தே படிப்போடு தொழிலும் சேர்த்துக் கற்பிக்கப்பட்டு வருகிறது. துணி, சமக்காளம் நெய்தல், அச்சடித்தல் முதலியவை கற்பிக்கப்பெறுகின்றன. சில வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு நாளிலும் பாதி நேரம் படிப்பும், பாதி நேரம் தொழிலும் கற்று வருகிறார்கள்.


இந்து மதம் : இதன் வரலாறு இருக்கு வேதத்தில் காணப்பெறும் மந்திரங்கள் என்னும் தோத்திரங்கள் இயற்றப்பெற்ற காலத்திலிருந்து தொடங்குகிறது; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட இக்காலம் இன்னதெனத் தெளிவாக அறியப்படவில்லை. தோத்திரங்களுள் மிகப் பழையன கி. மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடப்பட்டிருக்கலாம். மந்திர காலம், அக்காலத்துக்குப்பின் வைதிகக் கிரியைகளை விரிவாக விளக்கும் பிராமணங்களின் காலம், அதன்பின் அத்யாத்ம உபநிடதங்களின் காலம் என இம் மூன்று காலங்களையும் சேர்த்து வேதகாலம் என்று கூறுவது வழக்கம்.

நெருப்பு, காற்று, மழை முதலிய இயற்கைச் சக்திகளை மக்கள் தெய்வமாக்கி வழங்கிவந்த நிலைமுதலாக ஒரே பரம்பொருளின் கூறுகளே அவை என்பதை உணர்ந்து, அப் பரம்பொருளை அனுபவிக்கும் நிலைவரை மனித உள்ளம் வியக்கத்தக்க வகையில் முன்னேறியிருப்பதை இம் மந்திரங்களில் காணலாம். பழைய கொள்கைகளை விடுத்து, இந்த நிலையை அடைய வேத காலத்துச் சமயப் புலவர்கள் இருட்டில் வழி தடவுவது போல் முயல்வது தெளிவாகப் புலனாகின்றது.

வேத மந்திரங்களில் வளர்ந்து வந்த மற்றொரு முக்கியமான கருத்துப் பிற்காலத்தில் இந்த மதத்தின் சிறப்புக்களாக அமைந்த தருமம், கரும நியதி என்பவற்றின் ஓர் அடிநிலையாகிய ‘ரித’ என்னும் பிரபஞ்ச நியதியாகும்.

பிராமணங்கள் காலத்தில் புரோகித வேள்விகளையும் பிரதானமாகக் கொண்ட ஒரு சமயம் எழுந்தது. ஆயினும் இந்தக் காலத்திலும் சில முன்னேற்றமான கொள்கைகள் தோன்றாமலிருக்கவில்லை. அவற்றுள் மிக முக்கியமானது வருணாசிரம தருமம் என்பதாகும்.

பிற்காலத்தில் எழுந்த இந்து அகச் சமயங்கள் யாவும் உபநிடதங்கள் என்னும் சிறந்த நீரூற்றுக்-