பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிலாடு முன்றிலார்

56

அணு

அகப்படும் கந்தைத் துணி, நூல், பஞ்சு முதலியவற்றையும் தூக்கிக் கொண்டுபோகும். கூடு அலங்கோலமாக இருக்கும். அதில் 2 முதல் 4 குட்டிவரையில் போடும் குட்டிக்குப் பிறக்கும்போது உடலில் மயிரிராது. கண் திறந்திராது. சில நாட்களுக்குப் பிறகே மயிர் முளைக்கும் ; கண் திறக்கும்.

பலவகை அணில்கள் உணவு மிகுதியாக அகப்படும் காலத்திலே, பின்னுக்கு அகப்படாத காலத்துக்கு உதவும் வண்ணம் அதை வளைகளிற் சேர்த்து வைத்துக் கொள்ளும். பைன் மரக்காடுகளில் ஓரணில் ஒரு மூட்டை இரண்டு மூட்டை பைன் காய்களைச் சேர்த்து வைப்பதுண்டு. இப்படி வருமுன் காக்கும் சிக்கனம் அணில் நமக்குக் கற்பிக்கும் படிப்பினையாகும்.

அணில்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களிலெல்லாம் வெப்பவலயம் சமவெப்ப தட்பவலயம் ஆகியவற்றில் மிகுதியாக உண்டு. ஆஸ்திரேலியாவிலும், மடகாஸ்கரிலும் இவை யில்லை.

உலகத்தின் பல பாகங்களிலே செவ்வணில், சாம்பலணில், நரியணில், பறக்குமணில் என்றும், சின்சில்லா, சிப்மங்க், கோவர், மார்மட், பிரெய்ரி நாய் (Cynomys) என்னும் பல பெயருடனும் பலசாதி அணில்கள் இருக்கின்றன.

நமது நாட்டிலுள்ள அணில்களில் மூன்று முக்கிய வகைகள் பீன்வருமாறு: தென்னிந்தியாவில் வீட்டிலும் தோட்டத்திலும் காண்பது மூன்று வரிகள் உடைய சாதாரண அணில்; இது சிறு நரையணில் எனப்படும். வடநாட்டில் இருப்பதற்கு ஐந்து கோடுகள் உண்டு. இவை மனிதனோடு பழகி வாழ்கின்றன. வளர்ந்த அணில் அச்சமின்றி வந்து கையிலிருக்கும் தீனியை எடுத்துக் கொள்ளும். மலைகளிலும் அவற்றைச் சார்ந்த காடுகளிலும் உள்ளது இந்தியப் பேரணில் (Ratufa indica). தென்னிந்திய மலைகளில் பெருவாலணில் (Ratifa macroura) என்பது ஒன்றுண்டு. நம் நாட்டில் பறக்கும் அணில் பெருங்காடுகளில் உள்ளது பெடௌரிஸ்டா பிலிப்பென்சிஸ் (Petaurista phillipensis) என்பது.

அணில்மயிர் ஓவியமெழுதுந் தூரிகை செய்யவுதவும். இதன் மெல்லிய தோலினால் மிருதுவான சின்ன செருப்பு, பை முதலியன செய்கின்றனர். சிலர் அணிலைத் தின்கின்றனர்.

அணிலாடு முன்றிலார் சங்க காலத்துப் பெண் கவிஞர். கணவர் பிரிவு கண்டு வருந்தும் தலைவியின் நிலை அணிலாடு முன்றில் போலப் புல்லென்றிருந்தது என்ற கருத்துடைய செய்யுள் பாடியதால் இப்பெயர் பெற்றார். (குறுந்: 41)

அணிவகுப்பு : பார்க்க : யுத்ததந்திரம்.

அணுகுண்டு: பார்க்க: அணுசக்தி.

அணு: பொருள்களை ஆக்கும் அடிப்படையான துகள் அணு எனப்படும். இது தனியாகவோ, இதை யொத்த வேறு துகள்களுடன் கூடியோ இருக்கும்.

பழங்காலக் கொள்கைகள்

தத்துவ நூல் துறையில் மேம்பட்டு விளங்கிய பழங்கால இந்தியர்கள் பொருளின் தன்மையையும் ஆராய்ந்ததில் வியப்பில்லை. கதிரொளியில் மின்னும் தூசையும், மென்மையான வான வில்லையும் கண்டு அவர்கள் அணுவைப் பற்றிய கருத்துக்களை அறிய முற்பட்டனர். ஒரு பொருளைத் துண்டித்துக்கொண்டே சென்றால் கடைசியாகப் பிரிக்க முடியாததொரு துகளைப் பெறலாம் என்றும், எல்லாப் பொருள்களும் இத்தகைய துகள்களால் ஆனவை என்றும் அவர்கள் ஊகித்தனர்.

கபில முனிவரே இந்திய நாட்டில் அணுக்கொள்கை தோன்ற ஆதிகாரணமாக இருந்தவர். தமது சாங்கிய வேதாந்தத்தில் இவர் ஆற்றலின் அழிவின்மை விதியையும், பொருளின் அடிப்படையான பண்பான சடத்துவத்தையும் விவரித்துக் கூறினார். இவரை யடுத்துப் பதஞ்சலி முனிவர் பூதாதிகள் என்ற அடிப்படையான துகள்கள் பொருளில் உள்ளன என்றும், பூதாதிகள் ஆற்றலைப் பெற்றுத் தன்மாத்திரைகள் ஆகின்றன என்றும், பல தன்மாத்திரைகள் ஒன்றுகூடிப் பரமாணுக்கள் ஆகின்றன என்றும், பொருள்கள் பரமாணுக்க்ளின் தொகுதிகளே என்றும் விவரித்தார். தன்மாத்திரைகளின் அதிர்வினால் ஒளியும்; வெப்பமும் தோன்றக் கூடும் என்பது இவர் கருத்து. பரமாணுக்களின் சேர்க்கையாலும் பிரிவாலும் வெவ்வேறு ரசாயனப் பொருள்கள் தோன்றுகின்றன எனவும் இவர் கூறினார்.

தமது நியாய-வைசேஷிக வேதாந்தத்தில் கணாதரும் தற்காலக் கொள்கையைப் பெரிதும் ஒத்தவொரு அணுக்கொள்கையை வெளியிட்டார். எல்லாப் பொருள்களும் வாயு, நீர், ஒளி, மண் என்ற நால்வகை அணுக்களால் ஆனவை. எங்கும் பரந்து, எல்லாப் பொருள்களையும் ஊடுருவி நிற்கும் ஆகாசத்தில் இவை உள்ளன. அணுக்களின் சேர்க்கையாலும், பிரிவாலும் பொருள்கள் தோன்றுகின்றன. வெப்ப அணுக்களும், ஒளியணுக்களும் மற்றவகை அணுக்களைத் தாக்கி அவற்றில் மாறுதல்களை விளைவிக்கும். ரசாயன மாறுதல்கள் இத்தகைய தாக்குதல்களால் நிகழக்கூடும். ஒரு பொருளில் சீரான வகையில் அணுக்கள் அமைந்திருந்தால் அது ஒழுங்கான முகங்களையுடைய படிக வடிவுகள் கொண்டிருக்கும் என்பவை அவர் கருத்துக்கள்.

பழங்கால ஜைன தத்துவ ஞானிகளினிடையிலும் அணுக்கொள்கை நிலவியது.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்கத் தத்துவ ஞானிகளும் அணுக்கொள்கைகளை வெளியிட்டதுண்டு. இவற்றுள் டிமாக்ரெட்டஸ் (Democritus) என்ற அறிஞரது கொள்கை முக்கியமானது. இவரது கருத்துப்படி, பொருள்கள் அணுக்கள் என்ற துகள்களால் ஆனவை. இவை வெற்றிடத்தில் இருந்துகொண்டு பலவகையான மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. அணுக்கள் பலவேறு வடிவமும் அளவும் கொண்டவை. நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களைப் பலவேறு வகைகளில் அமைப்பதால் சொற்கள் தோன்றுவது போலவே அணுக்கள் பலவகைகளில் அமைந்து பொருள்களை ஆக்கும்.

டிமாக்ரெட்டஸின் கொள்கையைத் தொடர்ந்து எபிக்யூரஸ் என்ற அறிஞர் ஒரு கொள்கையை வெளியிட்டார். இவரது கருத்துப்படி அணுக்கள் எடையுள்ள துகள்கள். உலகில் உள்ள பொருள்களின் தன்மையையும், அதில் நிகழும் விளைவுகளையும் இக்கொள்கை மிகத் தெளிவாக விளக்கும் ஆற்றல் பெற்றிருந்தது. இரும்பின் காந்தத்தன்மையையும் உள்ளத்தில் தோன்றும் மன எழுச்சிகளையும்கூட எபிக்யூரஸ் தமது கொள்கை யினால் விளக்க முயன்றார்.

டால்ட்டன் கொள்கை

தத்துவ அறிஞர்களின் அணுக்கொள்கைகள் தத்துவ விசாரணையின் அடிப்படையில் எழுந்தனவே தவிர விஞ்ஞான அடிப்படையில் தோன்றவில்லை. ஆகையால் அவர்கள் தம் கொள்கைகளுக்குச் சோதனை வாயிலாகச்