பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘தெய்வப் பரணி’ என்று ஏற்றிப் போற்றப் பெற்ற ‘கலிங்கத்துப் பரணி’யின் உயிரோட்டத்திற்கு ஓர் அடையாள உருவமாக நிற்கிறான் கருணாகரன். உயிரில் உணர்வு ஏந்தி-உள்ளத்தில் கடமை பூண்டு-பற்றில் பாசம் பிணைத்து-காதலில் கருத்து வைத்துத் திரியும் ஒரு மனிதப் பிண்டம் இந்தக் கருணாகரன். தொடக்கத்தில் நாம் அவனைச் சக்திக்கும் நிலையில், படையில் சேரவும் அனுமதியிழந்து, ஏமாற்றத்தின் முதற்படியில் காலூன்றி நிற்கிறான். சந்தர்ப்பங்கள்தாம் சரித்திரத்தை வாழ வைக்கின்றன. இதற்குக் கருணாகரனே உதாரணம். தன் உயிரைத் திரணமாக மதித்து, சோணாட்டின் பட்டமா தேவியின் தாயின் உயிரைத் தெய்வத்திற்கு நிகராக ஒம்பியிராவிட்டால், அவனுக்கு அந்த ஏரியில் குதிக்கத் தெம்பு பிறந்திருக்காது! “என் வளர்ப்புமகன் கருணாகரனும், பிறப்பு மகன் விக்கிரமனும் கருத்தொருமித்து, வள்ளுவப் பெருந்தகையார் கண்ட நட்பிலக்கணமாக என்று வாழ்கிறார்களோ, அன்றுதான் கலிங்கப்போர் நிகழவேண்டும்!...‘காலத்தால் நிகழ்ந்த போர்க்களம் இது ஒன்றே’ என்று தமிழ்மக்கள் பெருமைப்படுவர்!...தில்லைச் சிற்றம்பல நாதர் அருளால் கலிங்கப்போர் வெற்றியாகவே முடியும்...அந்த வெற்றிக்குப் பிறகு...?” என்று முடிக்காமல் தயங்கிய தேவியின் சொற்களைச் சக்கரவர்த்தி முடிக்கும் காரணமாய்ச் சொல்லுகின்றார்: ‘கருணாகரனுக்குப் பட்டமும் பதவிகளும் வழங்கும்போது நம்முடைய செல்வக்குமரி அம்மங்கையையும் ஒப்படைக்க வேண்டும். அப்படித்தானே பட்டமானதேவி?” என்று கூறிச் சிரிக்கிறார்.

மதுராந்தி தேவியார்க்குத் தன் மனத்தவம் பலித்ததாக உள்ள ஓர் உள்ள மகிழ்வு உண்டாகிறது.

120