பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பெண்மை வெல்க!”

சீதை, சாவித்திரி, தமயந்தி, திரெளபதை போன்ற பெண்குலத் திலகங்களின் வழியினரான நம் பெண்கள் நம் சமூகத்தில் எப்பொழுதுமே மதித்துப் போற்றப்பட்டு வந்திருக்கிறார்கள். இடைநிலவிய இருளை மறந்து, இன்று நிலவும் ஒளியைக் காணும்பொழுது, பெண்களின் தன்மை - அவர்களது தகுதி - அவர்களுக்குரிய கடன் - அவர்கள் ஆற்றிய தொண்டு முதலிய நற்பண்புகள், அவர்களுக்கு வாய்த்த சோதனைகளாகவும், சாதனைகளாகவும் உருக்கொண்டு, அவர்களின் மட்டிலா மாண்புகளைக் கோபுர தீபங்களாக்கி வருகின்றன. இப்படிப்பட்டதொரு சமூக மறுமலர்ச்சித் திரும்பு முனைக்கு மூலாதாரமாக நிலவிய ஒரு ஜீவன், அண்ணல் காந்தியடிகள். அவர் நடத்திய நேர்மைத்திறன் அமைந்த அரசியல் சமுதாய இயக்கங்கள், பெண் சமுதாயத்தைப் புடம்போட்டுப் பண்படுத்தக் கைகொடுத்துத் தோள்கொடுத்தன. அறத்தின்பால் அமைந்த அன்பு வழியினைக் கடைப்பிடிக்க ஆடவரைவிட பெண்களே மிகுந்த தகுதியுள்ளவர்கள் என்பதை காந்தி மகான் தம்முடைய ‘சமூகத்தில் பெண்கள்’(Womans Role in Society) என்ற நூலில் அழுந்தச் சொல்லியிருக்கிறார்.

நம் கவிஞர் பாரதிக்கு, பெண்மையின் வாழ்வில் எப்போதும் ஓர் அக்கரை, கவலை; கடமை! பெண்மை வாழ்கவென்றும் பெண்மை வெல்கவென்றும் கூத்திடுவார். உணர்ச்சிமயமான கவியல்லவா?

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா;
மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;

15