பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குனிந்த தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் சீதா. ‘இனம்’ கண்டு கொண்ட மாப்பிள்ளை, தன்னை ‘இனம்’ காணத் தவிப்பதுபோல தன்னையே விழி பிசகாமல்- விதி பிசகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்ததும், அவளுக்கு மயிர்ச் சிலிர்ப்பு உண்டாகிறது.

செளந்தர ராகவன் என்ற ராகவன் மாப்பிள்ளைக் கோலம் தாங்கி, கோலம் நிறை புன்னகை கோலம் வரைய நின்று, ஏன் அவன் அவ்வாறு அழகின் ஒயிலாகவும் கனவின் கனவாகவும் அவள்முன் காட்சி தந்தான்?

அவனா காட்சி தந்தான்?

ஊஹும்!

அவளல்லவா அவன் முன் தரிசனம் கொடுத்தாள். அது ‘தேவதரிசன’மோ?

இல்லையென்றால், அவன் மனம்மருகியிருப்பான? ‘தெய்வப் பெண்ணோ? மயிலோ? காதிற் குழை அணிந்த இக்கன்னி மனிதப் பெண் “தானா?” என் நெஞ்சம் மயங்குகிறதே?’ என்ற நிலை அவனது உள்ளத்தின் மடியில் தவழ, அந்தச் சுகத்தின் மடியில் தலைவைத்துச் சுகம் காண கனவு கண்டிருப்பானா?

ராகவன் புன்னகை புரிந்தான்! வானத்திலிருந்து நட்சத்திரங்கள் பொலபொலவென்று உதிர்ந்து உலகைச் சுடர் மயமாக்கின!-சீதாவின் இதயமாகிய உலகத்தைத் தான்!

மாணிக்கவாசகப் பெருமானர் தம்முடைய ‘திருக்கோவையா’ரின் கண் ஒரு நிகழ்ச்சியைப் பாவாக்குகிறார்.

21