பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழ்வைத் துறந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், வாழ்வைத் துறக்காதவர்களுக்கும்கூட ‘வாழ்வு’ அமைந்து விடுகிறது. இதுவேதான் சிருஷ்டிப் புதிராகவும், சிருஷ்டியின் தத்துவமாகவும் அமைகிறது.

வாழ்க்கையை விரும்பவோ, வெறுக்கவோ மானுடப் பிறப்புக்கு உரிமை இல்லை!

காரணம், வாழ்க்கை என்பது தவிர்க்க முடியாத - தவிர்க்கக்கூடாத ஒரு விபத்தாகவும், கழித்துத் தீர்க்க வேண்டிய-கழிக்காமல் தப்பமுடியாததொரு கடனுகவும் அமைவதுதான்!

படைத்தோனின் கடன் மனிதனின் சென்னியில் விழுகிறது.

உருவாக்கியவனின் கனவு, உருவாக்கப்பட்ட மானிடத்தில் நிழலாடுகிறது.

முற்பிறவியின் சாயலை இப்பிறப்பில் மனிதப்பிறவி எட்டி ஒதுக்க முடிவதில்லை.

விளைவு, சோதித்தவனே சோதனைப் பொருளாகவும் ஆகிறான்!...

விளைகிறது வினை; தொடர்கிறது வினைப்பயன்.

ஆசைகளும் பாசங்களும், கனவுகளும் களவுகளும் காதல் சேஷ்டைகளும் காமக் குரோதங்களும் மனிதனுக்குப் புதிர்களாகி விடுகதை போடுகின்றன. அதுபோலவே மேற்குறித்த மையப்புள்ளிகளின் பின்னே இந்த அப்பாவி மனிதனும் புதிராகி, விடுகதை போடுகிறான்!

இந்தப்புதிர் விடுவிக்கப் பெறுவதற்குள்ளே நிகழும் நிகழ்ச்சிகள் ஒன்றா, இரண்டா?

27