பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலகத்தார் முன்னுரை

ஓர் ஆசிரியன் தான் வாழும் காலத்தில் தோன்றும் இலக்கியங்களைப் பற்றி மிகத் தெளிந்தமுறையில் திறனாய்வு செய்ய முடியுமா? என்பது கேள்வி. கூட்டம், வட்டாரம், கலாசாரம், போன்ற பந்தங்களிலிருந்து விடுபட்டு, விருப்பு-வெறுப்புகளை விஞ்சி நின்று ஓர் எழுத்தாளன் தன்னுடைய காலத்து இலக்கிய பிரம்மாக்களைப் பற்றி எழுதி இதுதான் முடிவான தீர்ப்பு என்று அறுதி இட்டு நிலைநாட்டி விட முடியுமா? என்பது அடுத்த கேள்வி.

இப்படி எத்துணையோ கேள்விகட்கு இடையில் ஒரு நாவலாசிரியர் பிற நாவலாசிரியர்களைப் பற்றி விமரிசனம் செய்வது என்பது பொருத்தமானதே. ஓர் எழுத்தாளன் பிற எழுத்தாளர்களின் தொழில் நுணுக்கங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். இலக்கிய ஆக்கம், திறனாய்வு ஆகிய இரண்டும் கைவரப் பெற்றிருப்பதனால் கட்டுக்கோப்பு, கருத்தின் திண்மை, கதை அமைப்பின் நெகிழ்ச்சி, இறுக்கம் முதலியவற்றைக் கண்டறிந்து செவ்வனே எடுத்துச்சொல்ல முடியும். இந்நூலாசிரியர் பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் இப்பணியைச் செவ்வனே செய்ய முயன்றுள்ளார். இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர். அறுநூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். மொத்தம் முப்பத்திரண்டு புத்தகங்களாக அவை வெளி வந்துள்ளன,