பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடியுமா, என்ன?-அழகி அவள். அவளுடைய எழில் நலம்பற்றிக் கொஞ்சம் கேட்கிறீர்களா?

‘மஞ்சள் கொன்றைப் பூவைப்போன்ற அவளுடைய அழகுக்கே வாய்த்ததோ என ஒரு நிறம். திறமையும் அழகுணர்ச்சியும் மிக்க ஓவியன் தன் இளமைப் பருவத்தில் அனுராகக் கனவுகள் மிதக்கும் மனநிலையோடு தீட்டியது போன்ற முகம். நீண்டு குறு குறுத்து மலர்ந்து அகன்று முகத்துக்கு முழுமை தரும் கண்கள்; எங்நேரமும் எங்கோ, எதையோ எட்டாது உயர்ந்த பெரிய இலட்சியத்தைத் தேடிக்கொண்டிருப்பது போல் ஏக்கமும் அழகும் கலந்ததொரு வனப்பை அந்தக் கண்களில் காணமுடியும். வாழ்க்கை முழுதும் நிறைவேற்றி முடிப்பதற்காக மகோன்னதமான பொறுப்புக்களை மனத்துக்குள் அங்கீகரித்துக் கொண்டிருப்பதுபோல் முகத்தில் ஒரு பொறுப்பின் சாயல். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த நாட்டுப் பெண்மையின் குணங்களாகப் பண்பட்ட யாவும் தெரியும் கண்ணாடிபோல் நீண்டகன்ற நளின நெற்றி. பூரணியைப்போல் பூரணியால் தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கினாள் அவள்!...’

ஒரு நாள்:

சித்தம் ஏந்திய ஆயிரம் சிந்தனைகளுடன், சிந்தனைகள் ஏந்திய ஆயிரமாயிரம் கவலைகளுடன் பூரணி கடந்து கொண்டிருந்தாள். அது ஒரு நாற்சந்தி, ஏமாற்றம், பசி, கடமை, துயர் ஆகிய உணர்வுகளுக்கு அவள் மனமே ஒரு நாற்சந்தி. இப்படிப்பட்ட வேளை கெட்ட வேளையில்தான் அந்த முல்லைக்கொடி அறுந்து விழுந்தது.

53