பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அளவிற் கலந்து-மதன்
நுகரப் படைத்த எழில்...”

இவ்வாறு ஆற்றொருழுக்காக ஓடும் கவிதைச் சக்தியில் ஓர் அழகி உருவெடுத்து, அந்த அழகி ஓர் ஆதரிச வடிவமாகவும் அமைந்து விடுவதாக ‘இனம்’ காணவும் வாய்ப்புகள் அரவிந்தனுக்குக் கைகொடுக்கின்றன. மனத்தவத்தின் மாண்புமிக்க நோன்பின் வல்லமைதான் மனித மனத்திற்குக் காதலெனும் தெய்விக சக்தியைப் பக்குவப்படுத்திக் கொடுக்கவல்லது. இவ்வுரிமைக்குரிய சொந்தமும் பந்தமும் அரவிந்தனுக்குக் கிடைக்கத்தான் வேண்டும். அதனால்தான் அழகிய பூரணியின் உருவம் அவனுடைய தூய உள்ளத்தில் நிற்கும் அளவுக்குப் பதிந்துவிடுகிறது. அழகைப் பகுதி பகுதியாகப் பார்த்தும் படித்தும் உணர்ந்து அறிந்த அரவிந்தனுக்கு காலத்தின் போக்கில், அவளது ஆதரிச வடிவத்திற்கு இலக்கணம் வகுக்கக்கூட முடிகிறது. கருத்திற்குக் கனவுப் பூச்சாகப் பொலிவுதரும் நிகழ்ச்சிகள் எத்தனையோ நடக்கின்றன; அவை அவன் மனத்தில் நற்சாட்சிப் பத்திரம் வழங்கி, அவனைப் பத்திரப்படுத்தவும் துணிவு கொள்கின்றன. பூரணிக்குக் கிடைத்துவந்த புகழ்மாலைகளின் நெடியை அனுபவித்துச் சமாளித்து மகிழுகிறான். ‘உழைப்பிலும் தன்னம்பிக்கையினாலும் வளர்ந்தவன் அரவிந்தன்.’ இவனுக்கு, பூரணி என்னும் பெண் எழுத்தில் மட்டுமே இடம் பெறத்தக்க இலட்சிய பிம்பமாக மட்டுமே தோன்றுகிறாள். இல்லையென்றால், கோடைக்கானலில், அரவிந்தனிடம் அவனுக்கும் பூரணிக்கும் நடக்க வேண்டிய மணவினைப் பேச்சைப்பற்றி மங்களேசுவரி அம்மாள் பேச்செடுத்தபோது, அவன் தட்டிக் கழித்திருப்பானா?

65