பக்கம்:கல்கி முதல் அகிலன் வரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இலக்கியம் செழிப்புற

சில எழுத்தாளர்களின் செருக்குணர்ச்சியும், மிதமிஞ்சிய ஆணவமும் விமர்சனம் என்ற பெயரால் தலைகாட்டிக் கொண்டிருந்தன. இன்றும் அப்படித் தான்! இலக்கியவட்டத்தின் தலைச்சுழி இது என்றோ இலக்கிய உலகை இழுத்துச் செல்லக்கூடிய அயன் எழுத்து இது என்றோ யாரும் மயங்கிவிடக் கூடாதே என்று நான் சிலசமயம் சிறிது கவலைப்பட்டதுண்டு. அதன் விளைவாகவே இலக்கியத் திறனாய்வுத் தொடரை ‘உமா’ இதழில் தொடங்கினேன். இலக்கிய உலகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாகச் சொல்லிக் கொண்டு பெரிய ‘ஜம்பம்’ அடித்துக் கொள்ளும் இந்த வேடிக்கை மனிதர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது.

இந்த இலக்கியத் திறனாய்வுத் தொடரைப் பலர் ஆதரித்துப் பாராட்டினர். பலர் அலட்சியப் பார்வையால் தங்கள் ஆத்திரங்களைக் கொட்டித் தீர்த்தனர்.

‘பாவை விளக்கு’ பற்றிய திறனாய்வுக் கட்டுரை உமாவில் வெளிவந்தபோது திருவாளர் அகிலன் படப்பிடிப்பு காரணமாக ஆக்ராவில் இருந்தார். என்னுடைய முயற்சியைக் கண்டுகளித்துத் “தமிழில் இத்தொடர் ரொம்பவும் புதுமையானது; அவசியம் தேவை. உங்கள் புதிய பார்வையைப் பாராட்டுகிறேன்” என்று அஞ்சல் அனுப்பினார்.