பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும்

113


மண்டலம், மூச்சு மண்டலம் ஆகியவற்றின் உறுப்புகள் யாவும் நல்ல வளர்ச்சியுறுகின்றன. வளர்ச்சியில் அதிகமாற்றம் தெரிகிறதில்லை; ஆனால் வளர்ச்சியுற வேண்டிய நிலையை எய்தியிருப்பதை அறிகின்றோம்.

சிறுவனின் நேரம் பெரும்பாலும் பள்ளிகளில் கழிகின்றது. சிறுவனின் மன வளர்ச்சியைக் குறித்தும் அவன் சமூகத்தில் பழகுவதைக் குறித்தும் ஆசிரியர் கவனிக்க வேண்டியவராகின்றார். தன் குடும்பத்திலுள்ளவர்களைத் தவிர, வெளியார்களுடன் சிறுவன் முதல் முதலாகப் பழகும் வாய்ப்புகளைப் பெறுகின்றான். இதனால் பலருடன் பழகும் அகன்ற அநுபவம் ஏற்படுகின்றது. எண்ணங்களும் கருத்துகளும் மொழி வளர்ச்சியும் சிறிது ஏற்படவே, சிறுவனின் விடுப்பூக்கம் செயற்படத் தொடங்குகின்றது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது. எனவே, மூத்தோர்களிடம் வினாமாரிகளைப் பொழிந்த வண்ணமுள்ளான். ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிறுவனுக்குத் தக்க விடையளித்து அவன் அறிவை வளர்க்கவேண்டும். இப்பருவத்தில் நசுக்கப் பெறுவதனாலோ அன்றி, கவனக் குறைவினாலோ சிறுவர்கள் விடுப்பூக்கத்தை இழக்கும்படி நேரிட்டால், பிற் காலத்தில் அவர்களின் அறிவு வளர்ச்சி தடைப்படும்; புதுப்போக்குடைமையும் [1] அறிவு நாட்டமும் இல்லாது போய்விடும்.

இப் பருவத்தில் சிறுவர்கள் பிற பிள்ளைகளுடன் கூடிக் குலாவுவதில் ஆர்வங்காட்டுகின்றனர். முன் பருவத்தைப் போல் சிறுவன் தன்னந்தனியனாக விளையாட விரும்புவதில்லை. பிற சிறார்களுடன் சேர்ந்தே விளையாடுகின்றான்; பலருடன் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து விடுகின்றான். பெரும்பாலும் ஒரே பாலைச் சார்ந்த சிறுவர்களே இக்குழுக்கள் அமைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவன் ஒருவனே இருப்பான்; பெரும்பாலும் தற்சாதிப்பும் உடல் வன்மையும் மிக்குள்ளவனே தலைவனாக அமைவான். இப் பருவத்திலுள்ள சிறுவர்கள் தம் சொல்லைக் கேட்பதில்லை யென்றும், சதா விளையாடச் சென்று விடுகின்றனர் என்றும் பெரும்பாலான பெற்றோர்கள் குறை கூறுவதை நாம் அறியாமலில்லை. இவ்வாறு அவர்கள் எண்ணுவதும் குறை கூறுவதும் தவறு. இப்பொழுதுதான் குழந்தைகள் வெளியுலகைப்பற்றித் தெரிந்து கொள்ள விழைகின்றனர் என்பதை அவர்கள் அறிதல் வேண்டும். வெளிச் சிறார்களுடன் கூடி விளையாடுவதால்


  1. 85. புதுப்போக்குடைமை - 0rginality.

த. உ. கோ.8