பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சிறுவர்களிடம் சமூக சம்பந்தமான சில பண்புகள் அமைகின்றன. தலைவனுக்குக் கீழ்ப்படிதல், குழுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாதல் போன்ற குணங்கள் இவர்களிடம் வளர்கின்றன. சில சமயம் சில தகவல்களைத் தலைமையாசிரியருக்குத் தருவதற்குக் கூட சிறுவர்கள் மறுப்பர்; ஒரு நண்பனைக் காப்பாற்றுவதற்காகவோ அல்லது தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒழுக்க நெறிகளின் பொருட்டோ இவ்வாறு செய்யக்கூடும். இந்நிலையில் பள்ளி ஆட்சியினர் இவர்களைப் பாராட்ட வேண்டுமேயன்றி இவர்களைத் தண்டிக்கச் கூடாது. விரும்பத் தகாத நடத்தையுள்ள பொழுது இவர்களை நுட்பமாகக் கையாண்டு அதனை நாசூக்காகக் களைய முற்படவேண்டும். ஏதாவது கட்டாயப்படுத்தித் தொல்லை தந்தால், அந்நடத்தை அவர்களிடம் நிரந்தரமாகவே படிந்துவிடும்.

சாரணர் இயக்கம், குடிமைப் பயிற்சி, இலக்கியக் கழகங்கள் போன்றவற்றையும், குழுவாக இணைந்து செயலாற்றும் பிறவற்றையும் அமைத்து இவர்களைச் செயலாற்றத் தூண்டவேண்டும். தம் வேலையைத் தாமே திறனாயும் திறனைப்[1] பெற்றிருப்பதால், சில சிறிய பொறுப்புகளைத் தரலாம். தன்னம்பிக்கை நன்முறையில் ஏற்படுகின்றது. குழுவுணர்ச்சி சிறந்தோங்கிக் காணப் பெறுகின்றது. தக்கமுறையில் இக்குழு உணர்ச்சிக்கு வேலை தராவிடில் அது பெருங் கேட்டில் கொண்டு செலுத்திவிடும். பல்வேறு விளையாட்டுகள், விளையாட்டுப் போட்டிகள், களியாட்டங்கள், நாடகங்கள் முதலியவை இப்பருவச் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை.

இப்பருவச் சிறுவர்களிடம் காணும் இன்னொரு சிறப் பியல்பு படிப்பில்[2] ஆர்வங்காட்டுதல் ஆகும். எத்தனை நூல்களைக் கொடுத்தாலும் அவற்றை விரைவில் படித்து முடித்துவிடுவர்-தாய்மொழிக்குச் சிறிதளவு ஏற்றங் கொடுத்திருப்பதால் இப்பொழுதுதான் பல நூல்கள் வெளி வருகின்றன. நம் நாட்டைப் பொறுத்த மட்டிலும் இந் நூல்களையெல்லாம் சிறுவர்கள் வாங்கும் நிலையில் இல்லை; பெற்றோர்களின் வறுமை நிலையே இதற்கு முதற் காரணமாகும். பள்ளிகள் தாம் ஓரளவு நல்ல நூல்களை அதிக எண்ணிக்கையில் வாங்கி வைத்துப் படிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். இப் பருவத்தில் படிப்பில் சுவை வளர்த்தலிலும் ஆசிரியர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.


  1. 86. தாமே திறனாய்தல் -Self-criticism
  2. 87. படிப்பு -Reading.