இயல்-4
குழந்தையைப் பற்றிய ஆராய்ச்சியிலும் அவர்கள் கல்வியிலும் எழும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று குடிவழி[1], சூழ்நிலை[2] ஆகியவை பெறும் பங்கு ஆகும். இதில் இரு வேறு கருத்துகள் உள்ளன. ஒரு சாரார், குழந்தைகளின் வளர்ச்சி, ஒழுக்கம் நடத்தை முதலியவை அவர்கள் பெற்றோரிடமிருந்தும் மூதாதையரிடமிருந்தும் பெறும் நிலையான சில கூறுகளால் முற்றிலும் அறுதியிடப்பெறுகின்றன என்று கூறுவர்; அவற்றை, எவ்வாற்றானும் அசைக்க முடியாதென்று வாதிப்பர். பிறிதொரு சாரார் அவை யாவும் குழந்தைகள் சூழ்நிலையில் பெறும் வாய்ப்புகளைப் பொறுத்தவை என்று சாற்றுவர்; சூழ்நிலையினால் அனைத்தையும் கைவரச் செய்யக் கூடும் என்று சாதிப்பர். இங்ஙனம் குடிவழிக்கும் சூழ்நிலைக்கும்-இயற்கைக்கும்[3] வளர்ப்புக்கும்[4]-இடையே நடைபெற்றுவரும் எதிர் வழக்கில்[5] இரு சாரார் கூறும் காரணங்களையும் சிறிது ஆராய்வோம்.
"குடிவழிக் கட்சியினர் கூறுவது : குடிவழியென்பது ஒரு குழந்தை தன் முன்னோர்களிடமிருந்து பெறும் மெய்ப்பண்புகளும் மனப்பண்புகளும் ஆகும். இதனால் குழந்தை உடல் அமைப்பில் தந்தையைப்போலிருப்பதன்றி, விருப்புகளிலும் வெறுப்புகளிலும், திறன்களிலும்[6] அறிதிறனிலும்,[7] பழக்கங்