பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடிவழியும் சூழ்நிலையும்

133



ஆகவே, கல்வி என்பது ஒருவரது உள, ஒழுக்கச் செயல்களின் திரட்சியாகும். ஒரு காலத்தில் காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் பெரும் புகழ் வாய்ந்த பண்பாடு, கலை, அறிவியல், மெய்ப்பொருளியல், சமயம், சமூகம் போன்ற துறைகளை அநுபவத்தாலும், கற்றலாலும், கல்வியாலும், பயிற்சியாலுமே வளர்த்துள்ளான் என்பதற்கு நாகரிகத்தின் வரலாறே சான்றாக நிற்கின்றது. அவனுடைய நற்பேற்றிற்குக்[1] குடிவழியே முதற்காரணமாக இருந்திருந்தால் அவன் இருபது நூற்றாண்டுகட்கு முன்னிருந்த நிலையிலேயே இருந்திருக்கவேண்டும். மேலும், வாழ்க்கையில் பழிகளைச் செய்து செய்து பாழாகப் போனவர்களும், தக்க ஏற்பாடுகளாலும் வழியமைப்புகளாலும் புதிய முறையில் வாழ்க்கையைத் தொடங்கி நன்னிலையை எய்தியுள்ளனர் என்பதற்கும் பல சான்றுகள் இல்லாமல் இல்லை. எனவே, சூழ்நிலையே ஒரு மனிதனை ஆக்குகின்றது அல்லது அழிக்கின்றது; குடிவழி என்பது கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டாத நிழலாகி விடுகின்றது.

இரண்டு கருத்துகளும் கல்வியில் செல்வாக்குப் பெற்றிருத்தல்: இரு வேறு துருவ எல்லைகளிலுள்ள இந்த இரண்டு கருத்துகளும் பொதுமக்களிடையே வேரூன்றியுள்ளன. இக் கருத்துகள் கல்வியைப் பற்றிய ஆசிரியர்களின் மனப்போக்கையும் அறுதியிடுவதால், அவர்கள் குடிவழி, சூழ்நிலை ஆகிய இரண்டைப் பற்றியும் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் இன்றியமையாததாகின்றது. குடிவழியே சிறந்ததெனக் கருதுவோர் கல்வியைக் கைவிடுகின்றனர்; அதனை அறவே புறக்கணிக்கின்றனர். தாம் எதிர்பார்த்ததற்கு மாறாகக் குழந்தைகள் காணப்பெறினும், அவர்களிடம் நற்பழக்கங்களை உண்டாக்கவேண்டும் என்கிற தம் முயற்சி தவறிப்போயினும், அவர்கள் சூழ்நிலையே அக் குழந்தைகளின் ஒழுக்கம், கற்றல், நடத்தை ஆகியவற்றை முன்னரே அறுதியிட்டுள்ளது என்றும், வரக்கூடிய முடிவை மாற்ற முயல்வது வீண் என்றும் பழம்பாட்டையே பாடுகின்றனர். அவர்கள் தம்மிடம் பயிலும் மாணாக்கர்களின் மேம்பாட்டில்[2] நம்பிக்கை இழக்கின்றனர்; அவர்கள் வகுப்புப் போதனையில் ஏதாவது பெற்றுத் தொலையட்டும் என்று வாளா இருந்து விடுகின்றனர். சில ஆசிரியர்கள் அவர்கள் தம் வகுப்பின் நிலையையே[3] குறைத்து விடுகின்றனர் என்ற குறையையும்


  1. 13. நற்பறுே-Fortune.
  2. 13. மேம்பாடு-Improvement.
  3. 14. நிலை-Standard..