பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்றல்

205


கற்றல் திறமை மக்களுக்கு உண்டு. மனிதனைத்தவிர ஏனைய உயிரினங்களின் குழவிகள் பிறந்தவுடனே வெகு விரைவில் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. மனிதக்குழவிகள் மட்டிலும்தான் நீண்டதும், துணையை நாடுவதும், மாறுதலடையக் கூடியதுமான குழவிப் பருவத்தைப் பெற்றுப் பல செயல்களைக் கற்க வேண்டியவைகளாக உள்ளன. குழந்தைகளின் மாறுதலடையக் கூடிய நரம்பு மண்டலமும் இதற்கேற்ப அமைந்துள்ளது.

கற்றல் என்றால் என்ன?

கற்றலை ஒரு குறுகிய வரையறைக்குள் அடக்கிக்கூற முடியாது. அஃது அகன்றதும் பலதிறப்பட்டதுமான ஒரு துறையாகும். அது மனிதன் இயற்றும் எல்லாவினைகளையும் அடக்கிக் கொண்டிருப்பது. ஆகவே, கற்றலின் ஒரு துறைக்குக் கூறும் இலக்கணம் மற்றொரு துறைக்குப் பொருந்தாது. பொதுவாகக் கூறினால், கற்றல் என்பது தகுந்த துலங்கல்களை ஏற்படுத்திக் கொள்வது என்பது. சில துலங்கல்கள் பிறவியிலேயே தோன்றுகின்றன. [எ-டு] சுவாசித்தல், இமைத்தல் போன்ற அனிச்சைச் செயல்கள்; உணவு வேட்கை, தாகவிடாய் போன்ற முதல் நிலை ஊக்கிகள். சில துலங்கல்கள் கற்கப்பெறுகின்றன. [எ-டு] நூற்றல், பாடுதல், வீணையை மிழற்றுதல் போன்றவை. இவை பிறவித் துலங்கல்களின் மாறுபாடுகளாகும்; அல்லது புதிய துலங்கல்கள் என்றும் இவற்றைக் கூறலாம். சுருங்கக் கூறின், பிறவித் துலங்கல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அறிவு வகைகளையும், உணர்ச்சி வகைகளையும், முயற்சி வகைகளையும் கற்கின்றோம். புதிதாகக் கற்கும் செயல் தனியாளின் அநுபவக் களஞ்சியத்துடன் கலந்து விடுகின்றது.

கற்றல் என்பது இயற்கையாற்றல்களைக் கொண்டு மேற் கட்டடம் அமைக்கப் பெறுகின்ற தென்பதற்கு மேலும் சில எடுத்துக்காட்டுகள் தருவோம். [எ.டு.] இசை-நுரையீரல்களிலிருந்து வரும் காற்றினால் நுண்ணிய குரல்நாண்கள் அசை வுற்று ஏற்படும் துலங்கல் குரல் ஓசையாகும். ஆனால், பிறவித் துலங்கலாகிய குரலோசை பல மாறுதல்கள் அடைந்து ஏழிசையாய், இன்னிசையாய் மாறுகின்றது. இன்னொரு எடுத்துக் காட்டு நமது பேச்சு. குரல்நாண்களின் இயக்கத்தைக் கொண்டே பேச்சு வளர்ந்தது. அதிலிருந்து நமது பல்வேறு கருத்துகளை எளிதாக எடுத்துக் கூறும் மொழிவளர்ச்சி ஏற்பட்டது. உலகமொழிகள் யாவும் மானிடக்குரல் நாண்களின்று எழும் இயற்கைத் துலங்கலாகிய குரல் ஒசையினின்றே எழுந்-