பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

கல்வி உளவியல் கோட்பாடுகள்


சாதாரணப் படிப்பின்[1] கடினம், அங்கு எதிர்பார்க்கப் பெறும் வேகம் இவர்களிடம் இன்மை, இவர்களுடைய ஆற்றல்களை வெளியிட வாய்ப்புகளின்மை போன்றவை இவர்கட்கு ஏமாற்றத்தை அளிக்கின்றன. அத்துடன் இவர்கள் உடன்பயில்வோரின் ஏளனத்திற்கும் துன்புறுத்தலுக்கும் இலக்காகின்றனர். இத்தனையும் போதாதென்று சில சமயம் ஆசிரியர்களும் இவர்கள் தம் வகுப்பின் நிலையைத் தாழ்த்திவிட்டதாகக் குறை கூறும்பொழுது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்றாகி விடுகின்றது. இதனால் ஆளுமை வளர்ச்சிக்குப் பழுது ஏற்பட்டு பிறழ்வான நடத்தையும் உண்டாகும். தோல்வி மனப்பான்மையும், குழப்பமும் நேரிடலாம். பொய், திருட்டு, எதிர்ப்பு போன்றவற்றில் இவர்கள் ஈடு செய்து கொள்வது இயல்பே. பள்ளியின்மீதும் சமூகத்தின்மீதும் இவர்கள் எதிர்ப்புத் தன்மையைக் காட்டுவர். இன்றைய வகுப்பு முறைக் கற்றலில் இந்த மாணாக்கர்கள் நீந்தவோ மூழ்கவோ விடப்படுகின்றனர்; பெரும்பாலும் மூழ்கியே விடுகின்றனர்.

மந்தத் தன்மைபற்றி நாம் கொண்டுள்ள கருத்தும் சரியன்று. கைவேலைகளிலோ, ஓவியம் வரைதலிலோ, இசையறிவிலோ குறைவாயிருப்பவர்களை மந்தர்கள் என்று நாம் சொல்வதில்லை; ஆனால், புத்தகப்படிப்பில் குறைவாகவுள்ளவர்களை மந்தர்கள் என வழங்குகின்றோம். காரணம், அறிவுக்கூறினை முக்கியமாய்க் கொள்வது வழக்கமாய்விட்டது. மந்தக் குழவிகளும் தம் ஆற்றலுக்கேற்றவாறு சமூகத்திற்குப் பயன்படுவர் என்பதை ஆசிரியர்கள் அறிவதுடன், அவர்களிடமும் அம்மனப்பான்மையை நிலவச் செய்தல் வேண்டும். இன்றைய கல்விக் கொள்கை இதனைத்தான் அதிகமாக வற்புறுத்துகின்றது. வண்ண வேலை, நடித்தல், ஓவியம் தீட்டல், நூல் நூற்றல், நெசவு வேலை, தோட்டவேலை, இசை போன்ற படைப்பு வேலைகளிலும், விளையாட்டுகளிலும் வாய்ப்புகளை நல்கி அவர்களது விடுதலையுணர்ச்சியைத் தடுக்காதிருந்தால், அவர்கள் முன்னேற்றம் அடைவர். தக்க முறையில் பொருத்தப்பாடும் எய்துவர். இவர்களைப்பற்றி குறை கூறலாகாது. ஒவ்வொருவருடைய மனநிலையையும் நன்கறிந்து தனித்த முறையில் கவனம் செலுத்தவேண்டும். படிப்பினை ஒரு பழுவான வேலைபோல் தோன்றாமல் பொழுது போக்காகத் தோன்றும் படிநிலைமைகளை உண்டாக்கவேண்டும். வாய்ப்பாடு, எழுத்துக்கூட்டல், படிப்பு போன்றவற்றில்


  1. படிப்பு-Reading.