பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல்பு பிறழ்ந்த நடத்தை

375


இக்குழந்தைகள் வளர்ந்தவர்களானவுடன் சமூகப் பொருத்தக் குறைபாடுகளை அடைவார்களாதலின், கூச்சத்தை இளமையிலேயே களைய முனைய வேண்டும்.

துணை செய்யும் முறை : கூச்சமுள்ள சிறுவர்களை அவர்கள் ஆயத்தமாக இல்லாத சமூகச் செயல்களில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அங்ஙணம் செய்தால், அச்சிறுவர்களிடமுள்ள உளச் சிக்கலை இன்னும் அதிகப்படுத்தக்கூடும். திறமையுள்ள ஆசிரியர் படிப்படியான ஏற்பாடுகளை அமைத்து அச்சிறுவர்கள் தாமாகவே பள்ளி வேலைகளிலும் சமூகச் செயல்களிலும் ஈடுபடும்படிச் செய்வார். கூச்சமுள்ள சிறுவன் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டுவிட்டால் அஃது ஒரு நல்ல தொடக்கமாகும். தானும் பிறருடைய மகிழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றும், தானும் ஒரு குழுவின் முக்கிய உறுப்பினன் என்றும் சிறுவன் தானாகவே உணரும் ஆற்றல் பெற்றுவிட்டால், அவன் பகற்கனவு காணமாட்டான், ஒதுங்கிப் போகவும் செய்யான். இச்சிறுவனிடம் காணப்பெறும் தனித்திறமை யொன்றினைக் குழுச் செயலுக்குப் பயன்படச் செய்தால், அச்சிறுவனுக்குப் பிறருடைய பாராட்டுதல் கிடைக்கும்; இந்த வெற்றியினால் அவன் நாளடைவில் படிப்படியாகக் கூச்சமும் நீங்சி சமூகச் செயல்களுக்கு நன்கு பொருத்தமுறுவான்.

வெளித்தோற்றம்[1] அல்லது மேல்வேடம்

ஒரு நாள் புதிதாக வந்த கணித ஆசிரியர் திரு. ப-எட்டாம் வகுப்பிற்குக் கணிதப் பாடம் நடத்த நேரிட்டது. அன்றுதான் அவர் முதன் முதலாக அவ் வகுப்பிற்குள் நுழைந்தார். முதலில் வருகைப்பதிவு செய்ய நினைத்து ஒவ்வொரு மாணாக்கனையும் பெயர் கொண்டு அழைத்தார். எல்லாம் சரியாக நடைபெற்றது. ‘துரைராஜ்!’ என்று கூப்பிட்டதும் வந்தது வினை. வளர்ந்த பையன் ஒருவன் எழுந்து புயங்களை முன்னும் பின்னுமாக அசைத்துக் கொண்டும், முன் கையிலுள்ள ஜிப்பா' பகுதியைச் சுருட்டிக் கொண்டும் காது துளைக்கும்படி வந்துளேன் ஐயா, நான் சரியாக இருக்கிறேன் பாருங்கள்-துரைராஜ் வகுப்பில் சரியாகத்தான் இருக்கின்றான் என்று கத்தினான். வகுப்பிலுள்ளவர்கள் அனைவரும் நகைத்தனர்; தற்காலிகமான ஒருவித ஒழுங்கின்மை நிலவியது. அடுத்த நாளும் இதே பிரச்சினைதான்.

ஆசிரியர் திரு. ப-ஒன்றும் சொல்லவில்லை துரைராஜுவின் நடத்தையைப்பற்றி எதுவும் பேசவில்லை. வகுப்பு வேளையின்


  1. 49. வெளித்தோற்றம்-Showing off.