பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

கல்வி உளவியல் கோட்பாடுகள்


அவர்களையே மீறி வெடித்துத் தாக்குந் தன்மையாகத் துலங்குகின்றது.

முதல்வகைத் தாக்குந்தன்மையை வெளிக்காட்டும் குழந்தைகளிடம் முதிர்ந்த நடத்தைக் கோலங்கள் துலங்கும் என்பதை எதிர்பார்க்கலாம். காரணம், அவர்கள் நல்லது எது, கெட்டது எது என்பதைப் பிரித்தறிந்து செயலாற்றுகின்றனர். பாதுகாப்பின்மையால் தாக்குந்தன்மையை மேற்கொள்ளும் குழந்தைகள் கண்மூடித்தனமான உட்தேவைகளின் காரணமாக வினையாற்றுகின்றன; ஆதலால், அவை நல்லது எது, கெட்டது எது என்று தெரிந்துகொள்வதையே வளர்த்துக் கொள்வதில்லை.

பெரும்பாலான தாக்குந்தூண்டல்கள் மனமுறவின காரணமாக எழுபவை. தம்முடைய வகுப்பு மாணாக்கன் ஒருவனால் தொந்தரவு தரப்பெறும் மாணாக்கன், தொந்தரவு தந்தவனைத் தாக்குகின்றான். சமூகத் தாழ்வுள்ள வகுப்பினரைச் சார்ந்த குழந்தைகளிடம்தான் பெரும்பாலும் இந்நேரடித் தாக்குதல்கள் நிகழ்கின்றன. நடுத்தர வகுப்பினர், உயர்நிலை வகுப்பினரைச் சார்ந்தவர்களிடம் இப்பண்பு நேரடியாக வெளிப்படுவதில்லை; நேரல் முறைகளில் அது வெளிப்படுகின்றது. ஒருவரால் அவமானப்படுத்தப் பெற்றவர் அவமானப்படுத்தியவரைத் தாக்க நினைப்பதில்லை. தான் விரும்பாத அவரைப்பற்றி ஏதாவது குத்தலான பேச்சினைப் பேசித் தன் உணர்ச்சியை வெளிப்படுத்தி விடுவார். கபடமற்றவர்கள்தாம் தாக்கும் உணர்ச்சியுள்ளவர்கட்கு இலக்காக[1] அமைகின்றனர். இல்லாளுடன் கலாம் விளைத்துக்கொண்டு காலையில் வகுப்பிற்கு வரும் ஆசிரியர் தன் வகுப்புப் பிள்ளைகளிடம் தாக்கும் உணர்ச்சியைப் பல வடிவங்களில் காட்டுகின்றார். ஆசிரியரால் வகுப்பறையில் தடைப்படுத்தப் பெறும் மாணாக்கன் இடை வேளையில் வெளிவருங்கால் விளையாட்டு மைதானத்திலுள்ள ஒரு குழந்தையைச் சேற்றில் தள்ளுகின்றான். மனமுறிவுடனிருப்பவர்கள் உயிரற்ற பொருள்களைத் தாக்கித் தம்முடைய உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். தட்டுமுட்டுகளை உடைப்போர், நாற்காலியை உதைப்போர், கதவுகளைப் படார் என்று கையாளுபவர் ஆகியோர்களை நாம் காணாமல் இல்லை. மனப்பொருத்தம் இல்லாதபொழுது சில சமயம் வீட்டிலுள்ள பெண்கள் சாமான்களை லொட் என்ற ஓசையுடன் வைத்து வெளிப்படுத்துவதை நாம் காணத்தான் செய்கின்றோம்.


  1. 54. இலக்கு-Target.