பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

கல்வி உளவியல் கோட்பாடுகள்


நெறி பிறழ்ந்த நடத்தையிலும் ஈடுபட நேரும். பிற்பாடான குழவிகள் எனப் பள்ளியில் இகழப் பெறுவன சமுதாயத்தில் பெருங்கேட்டினை விளைவிக்கும். உலகில் மனப்பாடம் செய்வதிலேயே பெருமை சிக்கிக் கிடக்கின்றது என்று யார்தான் சொல்லத் துணிவர்? எப்படியேனும் வகுப்பில் தம் நிலையைக் காத்து வருதல் வேண்டும் என்று முயன்றும், வெற்றிபெறா விடில் இழிபிறப்பாய்விடும் என்றும் நம்பப் புகுந்து பிறகு குழவிகளைப்பற்றிய கவலை என்பதே எள்ளளவும் இன்றி வாழும் போராட்டத்தையே காண்கின்றோம். ஒத்துழையாமையே இத்தகைய பள்ளியில் வளரக் கூடும். ஒருவருக்கொருவர் போட்டி போடுவதால் ஐயங்களும், பெறாமையும் எரிச்சலுமே விளைகின்றன.

ஆறாம் இயலில் தன்னோக்க முறையைப்பற்றிக் கற்றோமல்லவா? அதில் முன்னேற்பாடாகத் திட்டம் போட்டுக் குழவிகளே கூட்டுறவாக ஆசிரியர்களின் கண்காணிப்பில் பயின்று வருவதைக் கண்டோம். இதில் குழவிகள் செய்யவோ ஆராயவோ முயலப்போவதனை முன்னதாகவே அவை யனைத்தும் ஒன்று சேர்த்து வரையறைப்படுத்திக் கொண்டு உறுதியுடன் உழைக்க முந்துகின்றன. செய்யப்போவதற்கு ஏற்ற திட்டங்களை வரையறுப்பதிலும் அவை அனைத்தும் ஒத்துழைக்கின்றன. அதனை முடிப்பதற்கென எழும் பொறுப்பிலும் அவை அனைத்தும் பங்கு கொள்ளுகின்றன. தோல்வியோ வெற்றியோ அவை அனைத்திற்குமே ஏற்படும் என்பதில் அக் குழவிகளிடையே ஐயம் ஒன்றும் எழுவதில்லை.

இதிலிருந்து கூட்டுறவை வளர்க்கும் கல்வி முறையே சிறந்தது என்பது குன்றின் மேலிட்ட விளக்காகும், குழவிகளிடையே தக்கதொரு நோக்கத்தைத் தூண்டி எழுப்புதல் வேண்டும். அதற்கு ஏற்ற ஒரு வழியினையும் குழவி காணுமாறு செய்தல் வேண்டும். அதனைப் பின்னும் முயலவேண்டிய ஒர் ஊக்க நிலையையும் கிளர்ந்து ஓங்கச் செய்தல் வேண்டும். இந் நிலைகளில் எல்லாம் மாணாக்கர்களிடையேயும் ஆசிரியர் - மாணாக்கரிடையேயும் உள்ளக்கிளர்ச்சியைப்பற்றி நெருக்கடி ஒன்றும் நேராதவாறு காத்தல் வேண்டும். இவற்றிற்கெல்லாம் தக்க பழக்க வழக்கங்களை எழுப்பி வகை செய்து விடுவதே ஆசிரியக் கலையின் அருந்திறனாகும். இத்தகைய அமைதி நிலை ஏற்படாதபொழுது குழவிகளிடையே கொந்தளிப்பையே காண்கின்றோம். எதிர்ப்பும் கலகமுமே மனநிலை அளவிலோ அன்றி வெளிச் செயலிலோ தோன்றி விடுகின்றன. அக்கறை சிறிதுமே இன்றிக் கல்வியைப்பற்றிக் கவலை கொள்ளாத