பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒழுக்க வளர்ச்சி

397


ஒழுக்கத் துலக்கத்தில் பள்ளியின் பங்கு

குழந்தையின் வளர்ச்சி குடும்பத்தில் தொடங்குகின்றது. எனவே, குடும்பத்தின் பொறுப்பு அவ்வளர்ச்சியில் அதிகமாகின்றது. என்றாலும், பள்ளிகட்கும் இத்துறையில் சிறந்த பொறுப்பு இருக்கத்தான் செய்கின்றது. உயர்ந்த குறிக்கோள்களையும், தன்-மதிப்புப் பற்றையும் மனத்திண்மையையும் வளர்ப்பதில் பள்ளிக்குச் சிறந்த பங்கு உண்டு; அதை அது எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும். பள்ளி அதற்கெனவே ஏற்படுத்தப்பெற்ற ஒரு நிலையமாகும். இப்பணியைத் திறம்படச் செய்ய வேண்டுமென்பதற்காகவே தனிப் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அங்கு நியமிக்கப் பெறுகின்றனர்.

தன்-மதிப்புப் பற்று சமூகம் ஏற்படுத்தும் பண்பு என்று மேலே கண்டோம். வழிவழியாக வந்துகொண்டிருக்கும் பள்ளியின் மரபு38, அதன் கூட்டு வாழ்க்கை, பள்ளியில் ஏற்பாடு செய்யப்பெற்றிருக்கும் விளையாட்டு வகைகள், பயிற்றும்முறை, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் செல்வாக்கு முதலியவை மாணாக்கர்களிடம் தனிப்பட்ட முறையிலும் கூடிவாழ் முறையிலும் பயன்படும் சிறந்த பற்றுகளை வளர்க்கின்றன. இவை தக்க முறையில் நெறிப்படுத்தப்பெற்றுத் தன் மதிப்புப் பற்றாக அமைந்தால் சிறந்த முறையில் ஒழுக்கம் அமையும்.

பயிற்றும் ஆசிரியர்களும் உடன்பயிலும் தோழர்களும் குழந்தையிடம் தன்.மதிப்பை உண்டாக்குபவர்கள். அவர்கள் எதிர்பார்க்கும் முறையில்தான் குழந்தை நடந்து கொள்ளும். அவனிடம் அமையும் குறிக்கோள்கள் பயிற்றும் ஆசிரியர்களாலும், பயிலும் பாடங்களாலும், உடனிருந்து பாடங் கேட்கும் ஏனைய தோழர்களாலுமே ஏற்படும். ஆசிரியரின் புகழுரைகள், கடுஞ் சொற்கள், செயல்கள், உணர்ச்சிகள், அறிவு போன்றவைகளும் பரிசில்கள், தண்டனைகள் போன்ற ஏற்பாடுகளும் அவனிடம் பற்றுகளை உண்டாக்கும். இவற்றைச் சரியாக உணராத ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்குக் குறும்புக்காரன், ஒழுங்கற்றவன், மடையன், போக்கிரி என்ற பட்டங்களை வழங்குகின்றனர்! இதனால் பலர் இப்பட்டங்களை ஏற்று அவை உறுதியாகுமாறு நடந்து கொள்கின்றனர்! இப்படிப் பயனற்றுப் போகும் மாணாக்கர் எண்ணிறந்தோர். இவற்றை எதிர்க்கும் ஒருசில துணிவான மாணாக்கர்கள் ஆசிரியர்களுக்கே பட்ட மளிப்பு விழா நடத்தி விடுகின்றனர்!


38. மரபு-Tradition.