பக்கம்:களத்துமேடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

களத்து மேடு

களுடன் நடந்தாள். உயிருடன் பிறந்த பரிவு, அன்பு, பண்பு, பாசம் போன்ற உயரிய நல்லுணர்வுகளுடன் நடந்தாள்.

கிணற்றில் வாளியை அமிழ்த்தித் தண்ணிர் சேந்தினாள். வெயிலின் உக்கிரம் வேர்வையைச் சேந்தியது.

“இந்தாப்பாருங்க!” என்றொரு புதிய குரல் நூதனமான தொனியுடன் கேட்கவே, அவள் பொன்னின் பாவையாக மின்னி, பொற்பின் பதுமையாகத் திகழ்ந்தாள். ஆமாம்; வயசுப்பிள்ளை வாட்ட சாட்டமான அமைப்புடன் வந்து நின்று வலியப் பேசினால், அதே வயசு வாலைக் குமரிக்கு நாணம் பூக்காமல் இருக்குமா, என்ன? “என்னாங்க!” என்று பவ்யமாகக் கேட்டாள் தைலம்மை.

“தாகமாயிருக்குது!”-கையில் தார்க்குச்சி சகிதம் காணப்பட்டவன், விவரம் விளக்கினான்.

தைலம்மை அவள் வயசுப் பெண்டுகளிடம் பேச வாயெடுத்தால், வெகு துப்புரவான நகைச்சுவை வெடிகளை அள்ளி அள்ளி வீசுவது அவள் வழக்கம். இப்போது அவள் தன்னுள் எண்ணமிட்டுக் கொண்டாள். ‘தாகமா?...என்னா தாகமோ?...’ வந்த வடிவழகன் குனிந்த தலை நிமிரவில்லை.

“இந்தாங்க..”

வாளியில் நீரெடுத்தாள்; மேடையை உரசி நின்றாள். இரு கரங்களையும் குவித்துக் குனிந்து நின்றவனின் தாகம் தீர்த்தாள். நீர் அருந்துகையில், அவள் அறியாத வண்ணம் அவளுடைய போதம் நிறைந்த போதை எழிலை அவன் பருகினான். அவன் உணராத வகையில் அவனது புது வனப்பை அவளும் ரசித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:களத்துமேடு.pdf/23&oldid=1385864" இலிருந்து மீள்விக்கப்பட்டது