களத்து மேடு
63
பசிக்கிறக்கம் அவளுக்குப் பெரிதாகப் படவில்லை. அப்பனைக் காணாத கவலைதான் கலவரமாக உருவெடுத்தது. வயிற்றைக் காயப் போட்டுக் கொண்டு, காய்ந்த நிலவில் அரை நாழிகை நின்றுவிட்டு, பாயையும் தலையணையையும் தஞ்சமடைந்தாள் தைலம்மை. அவளிடம் அவளது கண்களின் புலம்பு முத்துக்கள் தஞ்சம் அடைந்தன.
நித்தில நிலவும் புதிர் நிறைக்காலமும் ஒன்றுக்கொன்று ‘பூப்பலி’ ஆகிக் கொண்டிருந்தன!
விடியும் வரை செங்காளியப்பச் சேர்வைக்காரரைக் காணோம்!
கீழத் தெருக் கோடியில் நாவித அம்மையப்பன் தோட்டம் இருந்தது. அங்கே இருந்த கேணியில் அருமையான தண்ணீர் ஊறியது, ஒரு சொட்டுத் தண்ணீரைச் சுவைத்தால் அப்படியே கிணற்றோடு குடித்துவிட வேண்டுமென்றுதான் தோன்றும். அவ்வளவு அற்புதமான தண்ணீர் அது. பால் போல வெளுப்பு. கரிசல் பாங்கு மண்ணில் விளைந்த இளநீரின் சுவைப்பு. அப்பால், கேட்க வேண்டுமா, அந்தத் தண்ணீருக்கு உண்டாகியிருந்த கிராக்கியை?
அந்தத் தோட்டத்து அடைப்புக் கதவுகள் எப்போதும் திறந்து கிடந்தன. அதற்குக் காரணம், அந்த ஏழைத் தொழிலாளியின் மனக் கதவுகளும் திறந்து கிடந்ததுதான்! அதற்கும் ஒரு பக்குவம் வேண்டாமா? ‘பிறரோட பொருளை ஏய்த்துப்பிடுங்கி ஏப்பம் பறிக்கும் நம்பிக்கை மோசக்காரர்கள் பெருகி வரும் மனித மிருகங்களின் கும்பலுக்கு மத்தியில்’