பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

எழுதப்பட்ட வரலாறுகள் மறுவாசிப்பிற்குரியவை என நாம் இன்று சொல்கிறோம். கால் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தப் பணியைத் தொடங்கியவர் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். களப்பிரர் காலத்தை தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சி அறுபட்ட, பண்பாடு அழிக்கப்பட்ட இருண்ட காலமாகத் தமிழ் அறிவுலகம் சித்திரித்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் களப்பிரர் காலத்தின் ஊடாகத் தமிழக வரலாற்றின் தொடர்ச்சியை நிறுவியவர் அவர். களப்பிரர் காலத்தில் தமிழ், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை கண்ட வளர்ச்சிகளைச் சுட்டிக் காட்டியவர் அவர். சைவ- இந்துப் பண்பாடுகளைச் சாராதவர்களை அத்தியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைக்கும் வரலாற்றுச் சூழலில் தமிழ்த் தொன்மையின் பன்மைத் தன்மையின் பாற் கவனத்தை ஈர்த்தவர் அவர். சமணமும் பவுத்தமும் இன்றித் தமிழில்லை என நிறுவியவர் அவர். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்த இடைப்பட்ட காலத்தில் களப்பிரர் காலம் குறித்து வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு மயிலை சீனி அவர்களின் ஆய்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லமுனையும் நோக்கில் எழுதப்பட்ட பேரா.அ.மார்க்ஸ் இன் விரிவான ஆய்வுரையுடன் இந்நூலை வெளியிடுவதில் விடியல் மகிழ்ச்சி அடைகிறது.