பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

23

அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்டமாட்டோம்' என்று சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு மற்றவர் எல்லோரும் சேர நாட்டுக்குப் போய்விட்டார்கள்.[1]

மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்கு
தில்லைவா முத்தணர் தம்மை வேண்ட அவரும் 'செம்பியர்தம்
தொல்லை நீடுங்குல முதலோர்க் கன்றிக் கட்டோம்முடி' என்று
நல்கா ராகிச் சேரலன் தன் மலைதாடனைய நண்ணுவார்

ஒருமை உரிமை தில்லைவாழந்தணர்கள், தம்மில் ஒரு குடியைப்
பெருமை முடியை அருமைபுரி காவல் கொளும்படி இருத்தி
இருமை மரபுத் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்திய பின்
வரும்ஐயுற வால்மனந் தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார்

இதனால், கூற்றுவனார், முடிசூடாமலே சோழ நாட்டை யரசாண்டார் என்பது தெரிகின்றது.

ஏறத்தாழ முன்நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்களைப் பற்றி வரன்முறையான வரலாறு கிடைக்காமல், மேற்காட்டியபடி, அங்கொரு துணுக்கும் இங்கொரு துணுக்குமாகக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு அரசியலில் களப்பிர அரசருக்குப் பெரிய எதிர்ப்புகளும் அரசியல் கலகங்களும் குழப்பங்களும் நாட்டில் இருந்து கொண்டிருந்தன என்பதைச் சில குறிப்புகளைக் கொண்டு அறிகிறோம். தமிழகத்தை யரசாண்ட களப்பிர அரசர்கள் எத்தனைபேர், அவர்களுடைய பெயர் என்ன அவர்கள் ஒவ்வொருவர் காலத்திலும் நடந்த நிகழ்ச்சிகள் எவை என்னும் வரலாறு ஒன்றும் தெரியவில்லை.


  1. கூற்றுவ நாயனார் புராணம் 4,5