களப்பிரர் காலத்து இருக்குவேள் அரசர்
பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர் புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை. அக்காலத்தில் கொடும்பாளூர் வட்டாரம் மிழலைக் கூற்றம் என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது.
தமிழ் நாட்டைக் களப்பிரர் அரசாண்ட காலத்தில் கொடும்பாளூர் வட்டாரத்தை இருக்குவேள் அரசர் அரசாண்டனர். இருக்குவேளிர், களப்பிரருக்குக் கீழடங்கி அரசாண்டனர் என்று தெரிகின்றனர். கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டு இருக்குவேள் பரம்பரையில் வந்த அரசர்களின் பெயர்களைக் கூறுகிறது. மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனம் கி.பி. 1907-ம் ஆண்டில் பழம்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1907-08-ம் ஆண்டு அறிக்கையில் இந்தச் சாசனத்தைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது.[1]
இந்தச் சாசனத்தின் தொடக்கமும் இறுதியும் உடைந்து போனபடியால் இது எழுதப்பட்ட காலத்தை யறிய இயலவில்லை . இது சோழக் கிரந்த எழுத்தினால் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சாசனத்தை ஆராய்ந்து திரு. நீலகண்ட சாஸ்திரி 1933- ம் ஆண்டில் ஒரு கட்டுரை எழுதினார்.[2] பிறகு இதை இவர் தாம் எழுதிய சோழர் என்ற வரலாற்று நூலிலும் எழுதினார்.[3] மூவர் கோயில் சாசனத்தின் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது கி.பி. 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று சாஸ்திரி சுருதினார்.
மூவர் கோவில் கல்வெட்டுச் சாசனத்தை ஆராய்ந்த ஹீராஸ் அடிகள், இச்சாசனத்தில் காணப்படுகிற வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு இது கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கூறி ஒரு கட்டுரை எழுதினார்.[4]
ஹீராஸ் அடிகள் கூறியதே சரி என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடிகளுடைய மாணவரான டாக்டர் எம். ஆரோக்கியசாமி அவர்கள் தாம் எழுதிய 'வெள்ளாறு வட்டாரத்தின் பழைய வரலாறு' என்னும் நூலில், மூவர் - கோயில் சாசனம் கி.பி. 7-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று கொண்டார். இந்தச் சாசனத்தில் கூறப்படுகிற இருக்குவேள் அரசர்களில் பரதுர்க்க