பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி 80

என்று கூறினார்கள்.[1] இனி அக்காலத்தில் உண்டான சைவ சமய நூல்களைப் பார்ப்போம்.

மூத்த திருப்பதிகங்கள்

திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்டபடியால் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் என்று கூறப்படும் இந்தப் பதிகங்களைப் பாடியவர் காரைக்கால் அம்மையார் என்னும் அடியார். இவர் அறுபத்து மூன்று சைவ அடியார்களில் ஒருவர். இவருடைய வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில், காரைக்கால் அம்மையார் புராணத்தில் காண்க, திருப்பதிகங்களைப் பாடியவர் திருநாவுக்கரசு நாயனார். அவர் காலத்திலே திருப்திகங்களைப் பாடியவர் அவருக்கு வயதில் இளையவராகிய திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார். இவர்கள் பாடிய பதிகங்களுக்குத் தேவாரத் திருப்பதிகங்கள் என்பது பெயர். இவர்களுக்கு முன்பு முதன் முதலாகத் திருப்பதிகம் பாடியவர் காரைக்கால் அம்மையாரே. ஆகையினால் அம்மையார் பாடிய திருப்பதிகங்களுக்கு மூத்த திருப்பதிகம் என்று பெரியோர் பெயரிட்டுள்ளனர். அம்மையார் பாடிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டே. இவற்றில் முதலாம் மூத்த திருப்பதிகம் கொங்கை திரங்கி நரம்பெழுத்து என்று தொடங்கும் பதிகம். இதன் பண் நட்டபாடை. இந்தப் பதிகம் பதினொரு செய்யுட்களைக் கொண்டது. இரண்டாவது மூத்ததிருப்பதிகம் எட்டி இலவம் ஈகை சூரை என்று தொடங்குவது. இதன் பண் இந்தளம். இதுவும் பதினொரு பதிகங்களைக் கொண்டது. காரைக்கால் அம்மையார் 7-ம் நூற்றாண்டிலிருந்த திருநாவுக்கரசருக்கு முந்தியவர் ஆகையால் இவர் கி.பி. 5.அல்லது 6-வது நூற்றாண்டில் இருந்தவராதல்வேண்டும். பழைய தேவாரப் பதிப்புகளில் காரைக்கால் அம்மையாரின் மூத்த திருப்பதிகங்களை முதலில் அச்சிட்டுப் பிறகு மற்றத் தேவாரப் பதிகங்களை அச்சிடுவது வழக்கமாக இருந்தது.

திருவிரட்டை மணிமாலை

இதனையியற்றியவரும் காரைக்கால் அம்மையாரே. இது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் ஆக இரண்டு செய்யுட்களால் ஆனது. அந்தாதியாகப் பாடப்பட்டது. இருபது செய்யுட்களைக் கொண்டது.

அற்புதத் திருவந்தாதி

இதை இயற்றியவரும் காரைக்கால் அம்மையாரே, நேரிசை வெண்பாவினால் அந்தாதியாக நூற்று ஒன்று செய்யுட்களைக் கொண்ட நூல். சிவபெருமான் மேல் பாடப்பட்டது.

காரைக்கால் அம்மையார் இயற்றிய இந்தத் தோத்திரப் பாடல்கள் பதினோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன.


  1. இது பற்றி இணைப்பு: 3 காண்க