பக்கம்:கழுமலப்போர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

கட்டி ஒரு வட நாட்டுத் தலைவன். தமிழ் நாட்டின் வடவெல்லையாகிய வேங்கட மலைக்கு அப்பால், வடுகு மொழி என்ற வேற்று மொழி பேசும் வடுகர் என்ற மக்கள் இனத்தவர் வாழும் நாட்டில், நல்ல வளம் மிக்க ஒரு சிறு நிலப் பகுதியை ஆண்டிருந்தவன் இக்கட்டி வேற்படைத் துணையால் வெற்றிபல பெற்றவன்.

தமிழகத்தின் எல்லைக்கண் வாழ்ந்திருந்தமையால், கட்டி தமிழ் நாட்டின் வளத்தை நன்கு அறிந்திருந்தான். வறண்ட வடநாட்டு வாழ்வை வெறுத்து வளங் கொழிக்கும் தமிழகத்து வாழ்வில் வேட்கை கொண்டான்; தமிழகத்துள்ளும், ‘சோறுடைத்து’ என்ற சிறப்பு வாய்ந்த சோணாட்டு வளம் அவனைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், அச்சோணாட்டைக் கைப்பற்றி ஆள விரும்பினான். அக்கால, சோணட்டைத் தித்தன் வெளியன் என்பவன், உறந்தைமா நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருந்தான். தித்தன் எனவும், தித்தன் வெளியன் எனவும் அழைக்கப்பெறும் அவன், சிறந்த கொடை வள்ளலும், பெரிய போர் வீரனுமாவான், அரிய போர் செய்யும் அவன் ஆற்றலையும், அவனுக்குத் துணை செய்யும் பெரிய படையையும், சினம் மிகுந்து போர் செய்யும் அதன் சிறப்பினையும் புலவர்கள் பலர் பாராட்டியுள்ளார்கள். பெரிய படையும் பேராண்மையும் உடைய அவன், தன் தலை நகராம் உறந்தையைத் தலைசிறந்த அரண் உடையதாக ஆக்கியிருந்தான். நாற்புறமும் நீண்டு உயர்ந்த மதில்கள் இடம்பெற, அவற்றைச் சூழ, சிறுசிறு மலைகளை இடை இடையே கொண்ட அடர்ந்த காவற்காடு வளர்க்கப்பட்டிருந்தது; பாய்ந்து வரும் பகைவர் படைக்கு இடையூறு பல விளைத்து, புறங்காட்டி ஓடப்பண்ணும் அதன் பெருமையும் புலவர்களால் பாராட்டப்பெற்றுள்ளது.[1]


  1. “போர் அரும் தித்தன்” –புறநானூறு:80
    “சினங்கெழு தானை தித்தன் வெளியன்” –அகநானூறு; 152.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/37&oldid=1359772" இலிருந்து மீள்விக்கப்பட்டது