பக்கம்:கழுமலப்போர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

உறையூர் அரசியல் உரிமையைக் கைப்பற்றக் கருதிய கட்டி, அவ்வுறந்தையை ஆளும் தித்தனது பெருமையை அறிந்தான். அவ்வளவு பெரும்படையும் பேராண்மையும் உடைய அவனைத் தனியே சென்று தாக்குதல் இயலாது; தக்க ஒருவனின் துணையோடே சென்று தாக்குதல் வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறு எண்ணியவன், தனக்கேற்ற துணைவனைத் தேடிக் காண்பதில் சிறிது காலம் தாழ்த்த வேண்டியதாயிற்று.

கட்டியின் நாட்டிற்கு அண்மையில் உள்ள நாட்டில் பாணன் என்பானொருவன் அரசாண்டிருந்தான். அந்நாடும் கட்டியின் நாட்டைப்போலவே நலம் பல பெற்று விளங்கிற்று. கட்டியைப் போலவே பாணனும் பெருவலியுடையனாய் விளங்கினான்; பெரிய வேற்படையின் துணையையும் பெற்றிருந்தான். இவை அனைத்திற்கும் மேலாக, மற்போரிலும் வல்லனாய் வாழ்ந்தான். இவ்வாறு படைவலியும் உடல் வலியும் பெற்றிருந்தமையால் பகைவர் நாட்டுப் பசு மந்தைகளைக் கவர்ந்து வருவதில் கருத்தினைச் செலுத்தியிருந்தான். ஆனிரை மேய்ந்து கொண்டிருக்கும் இடம் மிகச் சேய்மைக் கண் இருப்பினும் தயங்கான். மீண்டுவர நாள் பல ஆகும் என அறிந்து, ஆங்கு வேண்டும் உணவை மூங்கில் குழாய்களில் இட்டுச் செல்வன். பரல்கற்கள் நிறைந்த படுவழிகளைக் கடக்கக் காலில் செருப்பணிந்து செல்வன்; பகைவர் நாட்டுள் புகுந்ததும், ஆனிரைகளைக் காத்து நிற்கும் அந் நாட்டுப் படைவீரர் தங்கியிருக்கும் காட்டரண்களைத் தாக்குவதற்கேற்ற காலத்தை எதிர் நோக்கிக் காத்திருப்பன். தக்க சமயம் வாய்த்ததும் சிறிதும் தயங்காது வெளிப்பட்டுத் தாக்கி, அவரைத் துரத்தி விட்டு, ஆங்குள்ள ஆக்களையும், ஆனேறுகளையும் ஓட்டிக்கொண்டு வந்து சேர்வன். தன் நாடு


“நொச்சிவேலித் தித்தன்
உறந்தை கல்முதிர் புறங்காட்டன்ன

பல் முட்டு”
–அகநானூறு ; 122.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/38&oldid=1359783" இலிருந்து மீள்விக்கப்பட்டது