பக்கம்:கழுமலப்போர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சோழர் படையைச் சேர்ந்த தேர்கள் உயர்வும், உறுதியும் விரைவும் உடையவேனும், அவை சேரர் படையைச் சேர்ந்த களிறுகளின் உரம், ஊக்கங்களின் முன் செயலற்றுப் போயின, தம் அரசர் படையைப் பாழ் செய்வது சோழர் தேர்ப்படையே என்பதைக் கண்ட சேர நாட்டுக் களிறுகள், அத்தேர்ப்படையைத் தம் முழு ஆற்றலும் கொண்டு தாக்கி அழிப்பதில் ஆர்வம் காட்டின. தேர்ப் படை அறவே அழிவுற்றது. உருக்குலைந்து உரம் இழந்து வீழ்ந்த தேர்ப் படையின் அழிவைக் கண்ட பிறகும் களிறுகளின் சினம் தணித்திலது. தேர்க்கு உயிர் நாடியாய், அதன் இன்றியமையா உறுப்பாய் விளங்குவன அதன் உருள்கள், தேர்ப்படை தம்மீது, விரைந்தோடி வரத் துணைபுரிவனவும் அவ்வருள்களே என்பதை அறிய அறியக் களிறுகளின் சினம், அவ்வுருள்கள்து சென்றது. அழிந்து வீழ்ந்த தேர் உருள்களைத் தம் துதிக்கையால் பற்றித் தூக்கிச் சுமந்து கொண்டவாறே போர்க்களமெங்கும் அலைந்து வலம் வந்தன.

உருவாலும் நிறத்தாலும் மலைகளை நிகர்க்கும் களிறுகள், வட்டவடிவாய், ஒளி வீசும் பொன்னிறம் வாய்ந்த தேர் உருளைகளைச் சுமந்து திரியும் காட்சியைக் கண்டார் ஒரு புலவர், கண்ட காலம் மாலைக் காலம்; ஞாயிறு மேலை மலையினிடைச் சென்று மறையும் காலம். கரிய மலைகளுக்கிடையே மறையும் பொன்னிற ஞாயிற்றின் காட்சி, புலவர்க்குக் களக் காட்சியை நினைவூட்டிந்து. மலைகளுக்கிடையே ஞாயிறு மறையும் அம் மாலைக் காட்சிக்கும், களிறு தேர் உருளையைச் சுமந்து திரியும் களக் காட்சிக்கும் இடையே உள்ள ஒப்புமை கண்டு மகிழ்ந்தது. அவர் மனம், அம்மகிழ்ச்சியால் களத் காட்சியின் கொடுமை, அவர் மனக் கண்ணின்று சிறிதே மறைந்தது.

உருவக் கடுந்தேர் முருக்கி, மற்று அத்தேர்ப்
பரிதி சுமந்தெழுந்த யானை — இருவிசும்பில்
செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற, செங்கண்மால்

புல்லாரை அட்ட களத்து

—களவழி. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுமலப்போர்.pdf/54&oldid=1359942" இலிருந்து மீள்விக்கப்பட்டது