77
இனி இடம் இல்லை எனக் கூறுமளவு அவற்றின் உடல்களில் அம்பு தைக்குமளவு ஓயாது ஏவிக்கொண்டே இருநதனர். இனியும் நின்று போரிடுவது இயலாது என்ற நிலை பெற்று, நிலைகுலைந்து ஒன்றின் உடல் ஒன்றுமீது சாயும்வரை அம்பேவிக்கொண்டே இருந்தனர்.
இறுதியில் அம்பேறுண்ட யானைகள் நிலைகலங்கி அழிந்தன. ஒன்றையொன்று அடுத்து நிற்கும் மலைக்குன்றுகள் போல் காட்சியளிக்கும்படி, ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்து இறந்து கிடந்தன. அம்புகளின் முன்பாதி அழுந்திக் கிடக்க, பறவைகளின் இறகுபோலும் மறுபாதி புறத்தே வெளிப்பட்டுத் தோன்றிக் கிடக்க, யானைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சி, காண்பவர் உள்ளத்தில் மலை நாடாகிய சேர நாட்டில், மாலைப்பொழுதில் மனை திரும்பிய குருவிக்கூட்டம், எள்விழ இடம் இல்லாதபடி நெருங்க அமர்ந்திருக்கும் நெடிய மலைக் காட்சியை நினைப்பூட்டுவதாய்த் தோன்றிற்று. தோன்றவே, மனம் மகிழும் அம்மலைக் காட்சியைக் கண்டு களித்த கண்களால், கலங்கிக் கண்ணீர் சொரியவேண்டிய இக்கொடுங்காட்சியைக் காண நேர்ந்ததே என எண்ணிக் கண்ணீர் சொரிந்தனர்.
“யானை மேல் யானை நெரிதர, ஆனாது
கண்நோ கடுங்கணை செய்ம்மாய்ப்ப—எவ்வாயும்
எண்ணரும் குன்றில் குரீஇயினம் போன்றவே
பண்ணார் இடிமுரசின் பாய்புனல் நீர்நாடன
நண்ணாரை அட்ட களத்து.”
—களவழி : 8
புயல் புகுந்த பனந்தோப்பு :
படையால் பெருமை பெற்றனர் சோழர். அவர் படைப் பெருமையைப் பாராட்டவந்த ஒரு புலவர், “முன்னே தேர்ப்படை செல்ல, எல்லாவற்றிற்கும் இறுதியில், வில்வீரரும், வாள் வீரரும், வேல்வீரரும். ஆகிய வீரர்கள் செல்ல, இவ்வாறு வரிசை வரிசையாகச் செல்லும் அப்படை, இடைவழியில் ஒரு பனந்-