பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

33



7. காஞ்சிபுரம் மாநாடு; கவிக்குயில் முழக்கம்!

பம்பாய் மாநகரில் தங்கியிருக்கும் கவிக்குயில் சரோஜினிதேவிக்கு புகழாரங்கள் தேடிவந்தன மக்களும், அறிஞர்களும், மேனாட்டு மேதைகளும், பிரிட்டிஷ் பேரரசும் அந்தப் புகழாரங்களைச் சூட்டியதுடன்-பெருமைகளையும் அவர்களுக்குத் தேடிக் கொண்டார்கள்.

இந்த நேரத்தில் சரோஜினி தேவியின் நெஞ்சில் தைத்த நெருஞ்சிமுள் நினைவு சுருக்கென்று நிழலாடியது. நெருஞ்சி முள் கால் பாதத்தில் குத்தும்போது சுருக்கென்று சிறுவலி மட்டுமே ஏற்படும். அதனால் உடல் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

காலில் குத்திய இடத்தில் வேண்டுமானால் சிறு ரத்தக் குறிப்புத் தோன்றும்-அவ்வளவுதான்! அதைத் தட்டித் தடவி விட்டால் அந்த முள் கீழே விழுந்து விடும். அது போல, கவிக்குயிலுக்கு நெஞ்சிலே தைத்த நெருஞ்சி முள் போன்ற சிந்தனைகள் அவ்வப்போது அவருக்குச் சுருக் கென்று தாக்கும்.

நெருஞ்சி முள் தரையில் படர்ந்து காணப்பட்டாலும் நெருப்புச் சூடுதரும் சூரியன் எப்பக்கம் சாய்ந்து கதிர்களை வீசுகின்றதோ அப் பக்கமே-முள் தலைபாகம் திசை திரும்பும் தன்மையுடையது. அதற்கும் வெப்பம் வேண்டுமல்லவா? அதனால்

அந்த நெருஞ்சிமுள் தத்துவம் போலவே, கவிக்குயில் சரோஜினிக்கு, கவிதை, இலக்கியம், தேசத்தொண்டு, மக்கள் சேவை என்ற வெப்பம் நோக்கி, அவரது நெஞ்சுக் காயத்தின் தாக்குதல்கள் அவரது சிந்தனையிலே அவ்வப்போது நிழலாடித்தாக்கி நினைவுறுத்தும்.