பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

67

கான சமரச வழிகளை நீங்கள் கடைப்பிடித்துப் பழக வேண்டும்.

இந்தியருக்கோ அல்லது வெள்ளையருக்கோ தென் ஆப்பிரிக்கா பூமி சொந்தம் இல்லை. இரு இன மக்களும் குடியேறிய சகோதரர்கள். நீங்கள் மனித நேயத்தோடு சரி சமமாகவும், ஒற்றுமையோடும், முடித்தால் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் சேர்த்து வாழவும் கற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களுக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்றால் பிரிட்டிஷ் ராஜ்யத்தை விட்டுப் பிரிந்து செல்லுங்கள்.

இந்தியரும்-வெள்ளையரும் சேர்ந்து வாழ வேண்டுமா? எது வேண்டும் மனமே என்று பிரிட்டன் ஆட்சிதான் தன்னைத்தானே கேட்டு; இரு இன மக்களுக்கும் பதில் கூறியாக வேண்டும் என்று கவியரசி வெள்ளைக்காரர்களுக்கு புரியுமாறு விளக்கினார்!

கவிக்குயில், இவ்வாறு பேச்சளவோடு நின்று விடவில்லை; பத்திரிகைகளுக்குப் பேட்டியும் தந்து நிலையை விளக்கினார் ஆங்கிலேய அதிகாரிகளைச் சந்தித்தார்: முதன் முதலாக காந்தியடிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிவைத்த பிரதமர் ஜெனரல் ஸ்மட்சையும் நேரில் சென்று கண்டு இந்தியர்கள் பிரச்னையை எடுத்துரைத்தார்.

அப்போது, உர்பன் நகரம் டவுன் ஹாலில் நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு டர்பன் நகர உதவி மேயர் தலைமை வகித்தார். அவர் ஒரு பெண்ணின் தைரியத்தையும்-தேச பக்தியையும் வெகுவாகப் பாராட்டி தலைமையுரையில் பேசினார்.

அக்கூட்டத்திற்கு திரளாகத்திரண்டு வந்து காத்திருந்து இந்தியர்கள் மட்டுமல்லர்; வெள்ளைக்காரப் பெண்களும் கனதனவான்களும் கூட திரண்டு வந்து கவியரசியின் பேச்சைக் கேட்டார்கள்.