பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கவிக்குயில் சரோஜினியின்

'எளியவர்களுக்கும் இரவலர்களுக்கும் உதவ வேண்டியது அவசியம் என்பதை நான் மறுக்கவில்லையே! ஆனால், அதற்கும் சுதந்திரம் வேண்டாமா?

கை, கால்கள் கட்டப்பட்டவர்களிடம் பிறருக்கு உதவி செய் என்றால், அவர்களால் முடியுமா? தண்ணீர் தாகத்துடன் வந்தவர்களுக்கு ஒரு கோப்பை நீரும் தர முடியாத வேதனை நிலையில் இந்திய மக்களை உருவாக்கி விட்டு, நீங்கள் என்ன பரோபகாரம் செய்கிறீர்கள்? என்று கேட்கலாமா?

'அவ்வாறு கேட்பதானது ஒரு கேள்விக்குள் மறு கேள்வியை மூடி மறைத்து வைத்துக் கொண்டு கேட்கும் அநீதிச் செயல்களேயாகும். தலைவர் அவர்களே! உமக்கு இது தெரியாதா? புரிந்தும் புரியாதது போல் கேட்டவரே, இதோ அதற்குப் பதில்,

'பரோபகாரம் செய்யும் சூழ்நிலையை பிரிட்டிஷ் அரசு இந்தியருக்கு தர மறுத்துள்ளது. இரண்டாவதாக இந்தியர்களை அடிமைப்படுத்தியதற்காக வெட்கப்பட வேண்டிய வெள்ளைக்காரர்களே!'

'தங்களுடைய ஆட்சியால் ஏற்பட்டுள்ள அலங்கோலங்களுக்கு இந்தியர்கள் தான் பொறுப்பாளிகள் என்று குற்றம் சாட்டுவது பொருத்தமற்ற பேச்சாகும்.

சுதந்திரம் இல்லாமல் சமத்துவம் இல்லை. ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகைகளும் இந்தியர்களுக்கு தரப்பட வேண்டாமா? அவற்றைக் கேட்பது எப்படித் தவறாகும்?

உலகத்தின் அறிவுக் கதிராகவும், ஆன்மிகத்துக்குச் செவிலித் தாயாகவும் விளங்கும் இந்தியாவிடம் இருந்துதான், ஐரோப்பியர்கள் பரோபகாரச் சேவைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, பிறரிடம் இருந்து அல்ல.