பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

81

நாடெங்கும் உள்ள மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி விதித்த உப்புச் சட்டத்தைத் தூள் தூளாக்கினார்கள்; மக்கள் உத்வேகத்துடன் எழுச்சி பெற்று சட்டத்தை மீறினாலும், காந்தியடிகளின் கட்டளைக்குக் கீழ்படிந்து அரசு அடக்குமுறைகளுக்கு அடங்கியே நடந்து அமைதிக் காத்தார்கள்.

பம்பாய் பெருநகரிலே உள்ள தர்சனா என்ற இடத்தின் உப்பளத்தைக் கைப்பற்ற போவதாக மகாத்மா காந்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு அறிவித்தார். அப்போது உடனே அவர் கைது செய்யப்பட்டார்; சிறையில் அடைக்கப்பட்டார்.

காந்தியடிகளின் அறப்போராட்ட உத்தரவுக்கு ஏற்றவாறு, சரோஜினி தேவியும், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பின் தொடர தர்சனா உப்பளத்தை நோக்கிச் சென்றார்.

போகும் வழியிலேயே கவிக்குயிலும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டு, எரவாடா என்ற ஊரிலே உள்ள சிறையிலே அவர்களை ஆங்கிலேயர் அரசு அடைத்தது.

சிறையிலே பூட்டப்பட்ட சரோஜினி, மேலும் பல கவிதைகளை, முன்னைவிட அதிக உத்வேகத்துடன் எழுதினார். சிறையிலே தனது உணவு விடுதி அருகிலேயே அங்குள்ள மண்ணைப் பண்படுத்திப் பூச்செடிகளை வளர்த்தார்.

சிறை அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவரது கவிதை உள்ளத்துக்கு ஏற்றவாது அனுமதித்தார்கள்; அதனால், விதவிதமான மலர்ச் செடிகளை கவியரசி அங்கே பயிரிட்டு வளர்த்தார்.