பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

87

இரயில் வண்டிகளைக் கவிழ்த்தார்கள்; பெட்டிகளுக்குத் தீ வைத்தார்கள்; போலீஸ் நிலையங்களைத் தாக்கினார்கள். காவல் நிலயங்களும் எரிந்தன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றைப் பார்த்து சும்மாவா இருக்கும்? ராணுவத்தைக் கொண்டு வந்தது அரசு கடுமையான அடக்கமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது; துப்பாக்கி வேட்டுத் தர்பார் சர்வ சாதாரணமாக நடந்தன. போராட்டத்தை நடத்தும், அறிவாளர்களும், தலைவர்களும் சிறையிலே அடைத்து வைக்கப்பட்டதால், அதனை நடத்துவதற்கான தலைவர்கள் இல்லை; அதனால் ஆகஸ்ட் புரட்சி தணிந்தது!


16. இரத்த வெள்ளத்தில் வந்தது சுதந்திரம்!

இரண்டாம் உலகப் போர் 1945-ம் ஆண்டில் முடிவடைந்தது; நேச நாடுகள் வெற்றி பெற்றன. இரண்டு கூறுகளாகப் பிளவுபட்டிருந்த போர்க் கூட்டணி நாடுகளில் நேச நாடுகள் கூட்டணி மகிழ்ந்தன.

இந்தியாவின் வைசியராயாக வேவல் பிரபு வந்தார்; வந்தவுடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியத் தலைவர்களை எல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அப்போதுள்ள இந்திய மக்களின் மனக்குமுறல்களை நன்கு புரிந்து கொண்டார். என்ன செய்யலாம் இதற்குப் பரிகாரம் என்று சிந்தித்த வேவல் பிரபு, "இந்தியாவை இனிமேல் துப்பாக்கியால்தான் ஆள முடியும்" என்ற கருத்தை இங்கிலாந்து அரசுக்கு தெரிவித்து விட்டார்.