பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

"உலக மதங்களில் முதன்முதலாக ஜனநாயகத்தின் உண்மையான தத்துவங்களைப் பகிரங்கமாகப் போதித்துக் காட்டிய பெரிய மதம் இஸ்லாம் ஒன்றே!"

மேல்நாட்டினர் ஏதோ தமது நாட்டில்தான் முதன் முதலாக ஜனநாயகம் தோன்றிவிட்டதாகப் பெருமையோடு பேசுகிறார்கள். ஆனால், அதுவல்ல உண்மை! ஜனநாயகம் என்பது பரந்த பொருளில் ஆசியாவின் ஒரு பகுதியான அரேபியா பாலைவனத்தில் தோன்றிய ஒரு தீர்க்கதரிசியால் உருவாக்கப்பட்ட ஒன்று!

இந்த தத்துவத்தை, பெருமைமிக்க அக்பர், சக்ரவர்த்தி இஸ்லாத்தின் ஜனநாயகத்தை, அதன் உண்மை வடிவத்தில் காட்டினார்; அவரைப் பின்பற்றியாவது எனது இந்து-முஸ்லிம் சகோதரர்கள் மனத்திற்கொண்டு ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்."

சரோஜினி இவ்வளவு கருத்துக்களைக் கூறியும் ஜின்னா அதை மதிக்கவில்லை; அதனால், இடைக்கால அரசு ஒன்று ஜவகர்லால் நேருவால் அமைக்கப்பட்டது. அதில் சேருமாறு நேரு ஜின்னாவை அழைத்தார்.

முதலில் அந்த அரசில் அங்கம் வகித்த ஜின்னா, இடையில் இடையூறு சில செய்தார்.

இந்தியாவுக்கு மவுண்ட் பேட்டன் பிரபு 1947-ம் ஆண்டு மார்ச் 21 அன்று வைசியராயாக வந்து பதவி ஏற்றார்; இந்தியாவை இரண்டு துண்டாக்கினார்; ஒன்றை இந்துஸ்தான் என்றார்; மற்றொன்றைப் பாகிஸ்தான் என்று அறிவித்தார்.

இந்த பிளவுகளுக்குப் பிறகு 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியா உதயமாயிற்று. பண்டித நேரு முதல் பிரதமரானார்.