பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

91

மனிதத் தன்மைக்கு இலக்கணம் வகுத்துக் கொண்டு, மக்களை மீண்டும் மனித நேயத்துக்கு மீளுமாறு உழைத்து வந்த உத்தமப் பெருமானை, 1948 சனவரி 31ஆம் நாள் கோட்சே என்ற ஒரு இனவெறியன், மத விரோதி, சுட்டுக் கொன்றுவிட்டான்.

சரோஜினி தேவி காந்தியடிகளை ஆசானாக, அப்பாவாக, தலைவராக, வழிபட்டுத் தொண்டாற்றியவர்! குழந்தை போல காந்தியடிகளிடம் பழகியவர்; இருவரும் எப்போதும் நகைச்சுவை ததும்பவே பேசுவார்கள்.

மகாத்மா கருத்தை உலகுக்கு உணர்த்துவதில், பேசுவதில், எழுதுவதில் மிக வல்லவராக விளங்கியவர் சரோஜினி அதனால்தான், மகாத்மாவிடம் முழு நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார்.

மகாத்மா உண்ணாவிரதம் இருக்கும் போதும் சரி நோயுறும் போதும் சரி, சரோஜினி அவருடன் மகள்போல அமர்ந்து பணிவிடைகளை ஒவ்வொரு முறையும் செய்தவர் ஆவார். இந்த பாசத்தால் அவரது மரணச் செய்தி கேட்டதும் துடிதுடித்தது படபடப்புடன் ஓடினார்.

தில்லிக்கு ஓடிவந்தார் கவியரசி! காந்தியடிகளின் இறுதிச் சடங்கில் கண்ணீரும் கம்பலையுமாக, சோகமே உருவாகக் கலந்து கொண்டார்.

காந்தியடிகளது அஸ்தியிருத்த குடம் பின்வர, சரோஜினி தேவி முன்செல்ல டில்லியில் ஆஸ்திக்குடம் வந்து கொண்டிருந்தபோது, பண்டித நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மற்றும் எல்லாத் தலைவர்களும் உடன் வந்தார்கள்.

மகாத்மா மரணமடைந்த சோகத்தினால் துக்கத்தில் ஆழ்ந்துவிட்ட நாட்டு மக்களுக்கு கவியரசி சரோஜினி விடுத்த துயரச் செய்தி வருமாறு: