பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கவிக்குயில் சரோஜினியின்

“காந்தியடிகளின் உயிரும் எங்கள் உயிரும் ஒன்றே; அவை பிரிக்க முடியாதவை என்று எண்ணும்படி எங்களிலே சிலர் அவ்வளவு நெருங்கிப் பழகினோம்.

எங்களிலே பலர் அவருடன் உண்மையாகவே செத்து விட்டோம்; பாதி உயிர் போனவர்கள் போலாகி விட்டோம்! ஏனென்றால், நம் உயிரும், ஊனும், ரத்தமும் அவர் வாழ்க்கையோடு இணைந்தவை.

மகாத்மா மறைந்து விட்டார்; அவரோடு எல்லாமே போய்விட்டன என்று நாம் எண்ணினால், அது அவரை நிராகரித்ததாக ஆகும். அவருடைய உடல் நம்மிடையே இருந்து மறைந்து விட்டதால், அதனால் எல்லாவற்றையும் தாம் இழந்துவிட்டோம் என்று நினைத்தால், அவரிடம் நாம் வைத்திருந்த அளவுக்கும்: நம்பிக்கைக்கும் என்ன மரியாதை? அவருடைய வாரிசாக, பரம்பரையினராக, அவருடைய ஆன்மீக நிதியத்துக்கு உரிமையாளராக, அவருடைய இலட்சியங்களின் காவலராக நாம் இருக்கிறோம் என்பதை நாட்டுக்கு உணர்த்த வேண்டும். உரிமைக்காகத் துக்கம் காக்கும் காலம் கடந்துவிட்டது.

மரணத்தைக் கண்டு மாரடித்துக் கொண்டும், தலை மயிரைப் பிய்த்துக் கொண்டும் புலம்பும் நேரம் அல்ல இது. யார் யார் மகாத்மாவை எதிர்த்தார்கனோ அவர்களின் அறை கூவல்களை நாம் ஏற்றாக வேண்டும். பெற்ற விடுதலையை நாம் காப்பாற்றி, நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த உலகத்தின் முன்னிலையில் நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மகாத்மாவுக்குச் சேவை செய்வதற்கெனவே அவரிடம் சரணாகதி அடைந்தேன். மீண்டும் இன்றும் அதே கொள்கைகளுக்காகவே சரணடைகிறேன்!