வரையுற்ற பரிதி யோடும்
வானத்தில் படிந்தி ருந்த
கரையற்ற கவின னைத்தும்
கரைந்துபட் டொழுக வேதான்,
உரையற்று நின்று நோக்கி
உள்ளங்கொள் ளாத மட்டும்
புரையற்றுப் புலவன் வாரிப்
புலன்கொளப் பருக லானான்.
கவிஞனின் தாகம்
கணப்பொழு திருந்த தன்பின்,
கவிஞன் தன் கருத்தை மாற்றி,
“தணிப்பதற் கியலாத் தாகம்
தனிப்பட என்னைப் பற்றிப்
பிணிப்பது போலும் நந்தா!
பெரும்பொருள் இருந்தால் தீரும்;
மணப்பதற் கேது வாய்நாம்
மகிழ்ந்திடும் செயலுக்” கென்றான்.
கவிஞன் நந்தனுடன் இல்லுக்கேகல்
“அனைத்தையும் பேச லாம்நம்
அகத்தினில் சென்ற மர்ந்து;
மனத்தினில் பாரம் வேண்டாம்;
மாலையும் மறைதல் காணீர்!
இனித்தனித் திருந்தால் நம்மை
இருள்சூழ்ந்து கொள்ளும் அண்ணா”
எனத்துணிந் துரைத்தான், நந்தன்.
இயங்கினான் கவிஞன் மெல்ல.
26