பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு. மனித மனத்தின் பலத்திறனும் பலத்தளர்ச்சியும் பூச்சாண்டி காட்டி எழுதிக் காட்டும் அனுபவங்களின் முழுப்பெயர்தான் ‘வாழ்க்கை’. வாழ்க்கைக்காகத் தவம் இருந்து, நோன்பு இயற்றுதல் முன் நாளையக் கடன். கடன்பட்ட தொல்வினைப் பயனின் கடமையை அனுபவித்துப் பிரியவே ‘உடம்பு’ எடுக்கிறோம். இட்ட பலனும் தொட்ட வினையும் சுட்ட விதியும்,பூரணத்துவம் அடைகின்ற காலம் தவயோக ஞானிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்-அந்த நாட்களிலே! அதனால்தான், திருத்தொண்டர்கள் பலர் “பிறவா வரம் தாரும், பெம்மானே!” என்று பாப்புனைய முனைந்தார்கள் போலும்!

விருப்பத்தின் தொடக்கமாக மட்டுமோ, அல்லது வெறுப்பின் முடிவுக் கட்டமாகவோ மட்டும் அமையாது இந்த மண் வாழ்க்கை. புதிர்களுக்கும் சோதனைகளுக்கும், கனவுகளுக்கும் கருத்தழிவுகளுக்கும் பஞ்சமே இருக்காத காரணத்தினைக் கொண்டுதான், வாழ்வைப் புதிர்மயம் என்றும், ‘வாழ்வாவது மாயம்: இது மண்ணாவது திண்ணம்’ என்றும் சித்தர்கள் திடசித்தம் பெற்ற பாங்கில் பேசித் திரிந்திருக்கிறார்கள். திரிபுகொண்ட பேச்சா இது? இருக்காது.

ஏனென்றால் வாழ்வினைக் கண்டு நம் திருலோக சீதாராமும் அதிசயம் கொள்கின்றாரே! அவர்

20