பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்


காதலி

மதர்வேட்ட செவ்வரிக்கண் மதிமு கத்து
மலர்வேட்ட கருங்கூந்தல் மடமான், மாதாய்
எதிர்வீட்டில் பிறந்துவளர்ந் தெனக்கா கத்தான்
எழிலார்ந்த அணங்கெனவே இருக்கின் றாளென்
றதிர்வேட்டு வைத்திடினும் அஞ்சா தாகி
அரசமரத் தளிர்மறைவி லமர்ந்தி ருக்கும்
கதிர்வேட்ட கிளியெனவே நானும் வாசல்
கடைகாத்து நின்றிருப்பேன் அவளைக் காண!

கான்பெற்றுக் கொண்டுநனி களிக்கும், காண்போர்
களைப்பாற நீரருந்தும் சுனையை! கான்போல்
வான்பெற்றுக் கொண்டுநனி மகிழும், வாரி
வண்ணநில வொளிவழங்கும் மதியே! வான் போல்
தேன்பெற்றுக் கொண்டிருக்கும் மொழியாள்! தேர்ந்த
திருவுருவம் திகழுஞ்சிலை வடிவாள் தன்னை
நான் பெற்றுக் கொண்டுவக்கும் நன்னா ளென்வாழ்
நாட்களிலொன் றுண்டெனவே நம்பி னேன்நான்!

பூப்போலும் மேனியெனின் பொருந்தும்; போற்று,
பொன்போலும் வண்ணமெனின் பொருந்தும்; வெள்ளைப்
பாப்போலு முறுப்பனைத்தும் படியப் பெற்ற
பாவையவள்! பார்ப்பவர்கள் பறிக்கும் நற்பூங்
காப்போலும் தண்மையினள் எனினும், என்றன்
கண்காணாப் போதெல்லாம் கனலும் காட்டுத்
தீப்போல எரித்திடுவாள்; தினமும் நெஞ்சில்
தித்திக்கும் நினைவுகளைத் தெளித்து வைப்பாள்!

35