பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான்

வாடகை வீடு

வீடொன்று வேண்டி இருந்தது - அதுவும்
வீதிப் புறத்தில் விசாலமாய்!
வாடகை ஒன்றரை கூடினும் - சற்று
வசதி யுடனுள்ளதாகவே.
தேடிப் பிடிக்கத் தொடங்கினேன் - தினம்
தெருத்தவறாமல் திரிந்து நான்;
வீடென் றிருக்கும் இடமெலாம் - சென்று
விவரம் முழுதும் வினாவியே!

காற்றுப் புகாத குடிசைக்குள் - சதா
காரிருள் தங்கிடும் பொந்துகள்;
சேற்றக் குழிசல தாரைகள் - சூழச்
சிதலை அரித்திடும் கூரைகள்;
கூற்றுவன் கூடக் குடிபுகும் - புறா
கோழிகட் குத்தக்க கூடுகள்;
நூற்றுக் கணக்கில் இருந்தன - கெட்டு
நொந்து வசிப்பவர்க் காகவே!

தற்பொழு துள்ள இவ் வீடுதான் - வெயில்
தன்னைத் தடுக்க அமைந்தது:
சொற்ப மழைபெய்த போதிலும் - உள்ளே
சொட்டி வடியத் தொடங்குது
கற்புக் கரசிதா ராஅவள் - வந்து
காலடி வைத்த மறுகணம்,
வற்புறுத் திச்செப்பிச் சென்றனள்-'இதில்
வாழ்வு தொடங்கத்தகாதென.

60