பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

99


வலிமை! அளவற்ற பலம்! ஒர் அரக்கனுடைய தசைநார்களைப் போல அல்லவா அலைகள் எழுந்து எழுந்து அசைகின்றன.

படைப்புக்காலம் முதல் நிலத்திற்கும் நீருக்கும் இந்தப் போர் நடந்தே வருகிறது. உலர்ந்த நிலம் மெல்ல மெல்லத் தன் பகுதியை விரிவு படுத்திக் கொள்கிறது. தன் குழந்தைகளாகிய உலக மக்களுக்கு வாழ்விடம் பெருக்கித் தருகிறது. ஆனால், நீர்ப் பகுதியாகிய கடலோதன் இடம் பறிபோவதை உணர்ந்து பின் வாங்கிச் சென்று கூக்குரலிடுகிறது; விம்மி அழுகிறது. துயருற்றுத் தன் மார்பை அடித்துக் கொள்கிறது.

ஒரு காலத்தில் கடலே எல்லாமாக, தனிச் செங்கோலோச்சி, முழு உரிமையோடு விளங்கியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நிலம், கடலின் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தை, தாயின் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டது; அது முதல் பெற்ற தாய், பித்துப் பிடித்தவளாய் நுரை நுரையாய் கக்குகிறாள். ஓயாமல் அழுது விம்முகிறாள்; தன்னந்தனியே புயலில் சிக்குண்டு வருந்திய லியர் மன்னன் போல் துயருறுகிறாள்.

(1885-ஆம் ஆண்டு அக்டோபரில் எழுதிய கடிதம்)

புருவத்தில் தீட்டப்பட்ட மை!

“மாலையில்; மாடியின் மேல்; தனியாக நிலா முற்றத்தில்; உலாவுவது! நேற்றுப் பிற்பகலில் வீட்டிற்கு வந்தவர்களை அழைத்துச் சென்று, இந்த இடத்தின் இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்க வேண்டியது என் கடமை என்று உணர்ந்தேன்!