பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

17



அன்னை, அத்தை, தனது வீட்டுப் பணியாளர்கள், தந்தை அலுவலகக் கணக்கர் கைலாசம் போன்றவர்கள் கூறிய கதைகளை எல்லாம் காட்சி காட்சியாக, ரவீந்திரர் தொகுத்து, அக்காட்சிகளை தனது மனக் கண்முன் கற்பனை உருவிலே கொண்டு வருவார்! அப்போது, அவரது வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு பழைய பல்லக்கு இருந்தது. அது சவாரி செய்வாரற்று இருந்தது.

ரவீந்திரர் கற்பனை வானிலே சிறகடித்துப் பறக்கும் போது, அந்தப் பல்லக்கினுள்ளே ஏறி அமர்ந்து அதன் கதவை மூடிக் கொள்வார்! அவ்வளவுதான்! உடனே ரவீந்திரர் கற்பனையில் ராவணனுடைய புஷ்பக விமானம் போல் அந்தப் பல்லக்கு பறக்குமாம். அந்த மாயவிமானம் வானில் ஊர் ஊராக, சிற்றூர் பேரூராக, காடு காடாக பாலைவனம் தாண்டி, ஆறுகள் பலகடந்து, கடல்கள் தாண்டி, ஏதோ ஒரு குபேரபுரி போன்ற பெரும் நகரத்துக்குப் போகுமாம். உள்ளே உட்கார்ந்துள்ள சிறுவர் ரவீந்திரர் உடனே அலெக்சாண்டராவாராம், இராமனாக மாறுவாராம்; அசோகனைப் போல முடி சூட்டிக் கொண்டு பெருமிதமாக நீதி விசாரணையினை நடத்துவாராம். பல்லக்கு அந்நகரத்துக்குள் தரை இறங்குமாம், காலாட்படை, குதிரைப்படை, வேழப்படை, தேர்ப்படை இவையெல்லாம் அவரது பல்லக்கைப் புடைசூழ்ந்து கொள்ளுமாம்! உடனே பல்லக்கில் மீண்டும் பேரரசுப் பெருமிதத்தோடு அங்கிருந்து அவர் புறப்பட்டு விடுவாராம்.

மீண்டும் திரும்பும்போது கடல்கள் குறுக்கிட்டால், கப்பலாக மாறிவிடுமாம் பல்லக்கு, ஆறு தென்படுமானால் அதே பல்லக்கு அழகான ஓடமாக மாறுமாம்!