பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



இயற்கை அவரை ஈர்த்தது எப்படி?

ரவீந்திரர் சிறுவராக இருக்கும்போது, இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிப்பார் என்று முன்பே குறிப்பிட்டோம்! மக்களிடையே நடக்கும் இயற்கைச் சம்பவங்களை எல்லாம் கண்டு அதற்கேற்ப தனது கற்பனையை வளர்த்து பெருக்கிக் கொள்வார்.

மழை பொழியும் அழகை ரசிப்பார். பெய்த மழை சிறு சிறு கால்வாய்களாக நகரின் ஓரத்திலே ஓடும் சலசல என்ற ஒலியைக் கேட்டும் பார்த்தும் மகிழ்வார்! பனிக்காலங்களிலே புற்களில் காலையிலே காணப்படும் பனிநீர்த் துளிகளைக் கண்டு மெய் மறந்து சிந்திப்பார்!

மழைக் காலங்களிலும், பனிக்காலங்களிலும் துளிர்விடும் மரத்தின் புதிய இலைகள், செடி, கொடிகளின் இலைகளிலே படர்ந்து தங்கியுள்ள பனித்துளிகளின் பளபளப்புத் தோற்றம், அப்போது வீசும் மெல்லிய காற்றில் மலர்வனத்துப் பூக்கள் அசைந்தாடும் காட்சிகள் அவருடைய குழந்தை மனத்தை பித்துப் பிடிக்க வைத்து விடுமாம். மெய் மறந்து ரசிப்பாராம்.

வயது என்னவோ ஏழு எட்டிலே நடைபோடும் சிறு பருவம்தான், என்றாலும் அந்த வயதிலேயே அவர் விண்ணையும் மண்ணையும் தனது கற்பனையால் அளந்து பார்த்தார்!

வீட்டு வாயிலின் முன்பு விசேஷ நாட்களில் பந்தல் போட குழி தோண்டும் போதும், கம்பங்களை நடும் போதும், எதற்கு எது ஆதாரமென்று மண்ணின் ஆழத்தை, அதன் குழியைப் பார்ப்பாராம். அதாவது மண்ணுக்குக் கீழே பாதாள லோகம் இருக்கிறது. என்று அத்தை சொன்னதை வைத்து பந்தல்