பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. தாகூரைக் கவர்ந்தன
காளிதாசர் நூல்கள்

ரவீந்திரருக்குப் பாட்டு எழுதும் ஆசை, அவர் பள்ளியில் படிக்கும்போதே ஏற்பட்டது. பாடங்களை எழுதிட நோட்டுப் புத்தகங்களை அவரது தந்தையார் வாங்கிக் கொடுத்தால், அவற்றில் எல்லாம் பாடல்களாக நிரப்பிவிடுவார்.

நோட்டுப் புத்தகங்களை நிரப்பி விடுவதோடு மட்டும் நில்லாமல், தான் எழுதிய பாடல்களை தனது வீட்டிலேயே எல்லாருக்கும் கேட்கும்படி தாகூர் படித்துக் கொண்டே இருப்பார்! உரத்த குரலில் அவர் படிப்பதை அவருடைய தந்தையும், அண்ணன்களும் கேட்டு ரசிப்பார்கள்.

தந்தையின் கனவு

தனது மகன் பதினொரு வயதிலேயே வங்கமொழியின் அருஞ்சொற்களைத் தனது பாடல்களில் புகுத்தி எழுதியிருப்பதைக் கண்ட அவரது தந்தை, மிக வியந்து கேட்பார்! எதிர்காலத்தில் தனது மகன் சிறந்த ஒரு வங்கக் கவிஞன் ஆவானோ என்று அவர் பலமுறை ஆச்சரியப்பட்டதுமுண்டு. அந்த அளவுக்கு தாகூர் தனது சிறு சிறு பாடல் வரிகளிலே வங்க மொழியின் அருஞ்சொற்களை எழுதிவந்தார்!