பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

27




இமயமலையில்; தந்தையும்-மகனும்!

இமயமலையின் அடிவாரத்தில் டல்ஹவுசி என்ற ஓர் இடம் உள்ளது. அது ஓர் அழகான தோற்றமுடைய சிற்றூர். பிரிட்டிஷ் ஆட்சியில் கவர்னர்-ஜெனரலாக இருந்த டல்ஹவுசி என்பவரின் பெயரை அதற்குச் சூட்டினர். சுற்றுலா செல்பவர்கள் தங்குவதற்கான அழகான விருந்தினர் மாளிகையும் அங்கே இருந்தது. இமய மலையின் அழகையும், அதன் சாரல் சுகபோகங்களையும் அனுபவிக்கச் செல்பவர்கள் டல்ஹவுசியிலே தங்குவது உண்டு.

அந்த டல்ஹவுசியிலே தேவேந்திர நாத் தாகூரும், ரவீந்திர நாத் தாகூரும், அதாவது தந்தையும்-மகனும் நான்கு மாதம் தங்கியிருந்தார்கள். அங்கே, ரவீந்திரர் தனது கவிதை உள்ளத்திற்கேற்றவாறு விருப்பம்போல இயற்கைக் காட்சிகளைச் சுற்றிச் சுற்றிப் பலமுறை பார்த்தார்.

அந்தக் குளிர்ச்சியான இடத்திலும் தேவேந்திரர் தனது மகனை குளிர்ந்த தண்ணீரிலேயே குளிக்க வைப்பார்! எக்காரணம் கொண்டும் வெந்நீரே தரமாட்டார்.

தனது மகன் பலவழிகளிலும், இன்ப-துன்ப நிலைகளிலும் பழக வேண்டும்; இயற்கையோடு அவனது உடலும் ஒத்துப் போக வேண்டும்; என்ற ஆசைதான். அங்கே இருக்கும் தண்ணீர் பனிக்கட்டிபோல சில்லென்று இருப்பதைக் கண்ட பிறகும், தனது தந்தையார் விருப்பத்திற்குகந்தவாறு ரவீந்திரர் பச்சைத் தண்ணீரிலேயே தினந்தோறும் குளித்துப் பழகினார். இதனால் பிற்காலத்தில் அவர் இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றிருந்த போது, அங்கு குளிர் காலத்திலும் தினந்தோறும் குளிர்ந்த தண்ணீரிலேயே குளித்தார்.